பிரபல நடிகரும் இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படத்தை பாராட்டியுள்ளார்.
இயக்குனர் மாரி செல்வராஜ், பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவருடைய படங்கள் பெரும்பாலும் சமூகத்தில் சொல்ல தயங்கும் விஷயங்களை மிகவும் அழுத்தமாக சொல்லி இருக்கும். அந்த வகையில் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளையும் பெற்றுவிடும். அடுத்ததாக இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள வாழை திரைப்படமும் பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது. மாரி செல்வராஜின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படம் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி திரையிடப்பட்டது. திரையிடப்படுவதற்கு முன்பாகவே பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வந்த வாழை திரைப்படம் கிரையிடப்பட்டதற்கு பின்பும் திரையரங்குகளில் வெற்றி நடை போடுகிறது. பாரதிராஜா, சீமான், சிவகார்த்திகேயன், மணிரத்னம், பாலா என பல முக்கிய பிரபலங்களும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரபல நடிகரும் இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன் வாழை திரைப்படத்தை பாராட்டியுள்ளார்.
நன்றியும் ப்ரியமும் @pradeeponelife bro ❤️❤️ #vaazhai pic.twitter.com/Hggh0cZ1kx
— Mari Selvaraj (@mari_selvaraj) August 27, 2024
“வாழை படம் பார்த்தேன். சூப்பராக இருந்தது. இந்த படத்தை பார்த்த பின் மாரி செல்வராஜ் மீதுள்ள மரியாதை இன்னும் அதிகமாகிவிட்டது. மாரி செல்வராஜின் வாழ்க்கை வரலாறு தான் வாழை திரைப்படம் என்று நினைக்கும் போது எந்த இடத்தில் இருந்து எந்த இடத்திற்கு அவர் வந்திருக்கிறார் என்று வியப்பாக இருக்கிறது. சொல்வதற்கு வேறு வார்த்தைகளை வரவில்லை. அவர் மீதுள்ள மரியாதை தான் அதிகமாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வீடியோவை இயக்குனர் மாரி செல்வராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து பிரதீப் ரங்கநாதனுக்கு நன்றியும் தெரிவித்திருக்கிறார்.