தெலுங்கு திரை உலகின் பிரபல இயக்குனரான ராஜமௌலி மகதீரா (மாவீரன்), பாகுபலி போன்ற பிரம்மாண்ட படங்களை படைத்து ரசிகர்களிடையே கவனம் பெற்றார். அதிலும் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி 1, பாகுபலி 2 ஆகிய படங்கள் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் கூட்டணியில் ஆர் ஆர் ஆர் எனும் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் பல்வேறு விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக ராஜமௌலி, மகேஷ் பாபு நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இந்த படம் புதையலை தேடி செல்லும் சாகசங்கள் நிறைந்த படமாக உருவாகவுள்ளது. இது சம்பந்தமான தகவல்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் கசிந்திருந்தது. இந்நிலையில் புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.
அதன்படி இப்படத்தில் விலங்குகள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும், அடர்ந்த காடுகளில் இப்படம் படமாக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்தியாவில் விலங்குகளை படம் பிடிக்க அதிக கட்டுப்பாடுகள் இருப்பதனால் வெளிநாடுகளுக்குச் சென்று இப்படத்தை படமாக்க பட குழுவினர் திட்டமிட்டுள்ளாராம். அந்த வகையில் இப்படம் அமேசான் காடுகளில் படமாக்கப்பட இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படம் சம்பந்தமான அறிவிப்புகள் இந்த ஜனவரி மாதத்தின் கடைசி வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகேஷ் பாபு நடிப்பில் உருவாகியுள்ள குண்டூர் காரம் திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.