நடிகர் ரஜினி, மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க மறுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் ரஜினி கடைசியாக வேட்டையன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதேசமயம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதன் பின்னர் நடிகர் ரஜினி, நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இதன்படி ஏற்கனவே இந்த படம் தொடர்பான அறிவிப்பு வீடியோவும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விரைவில் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம், இயக்குனர் மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து முக்கியமான இயக்குனராக மாறியுள்ளார். தற்போது இவர் துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை 2025 கோடையில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் தான் மாரி செல்வராஜ், நடிகர் ரஜினியை இரண்டு முறை சந்தித்து அவரை இயக்குவது தொடர்பாக பேசியதாகவும், ஒரு சில காரணங்களால் நடிகர் ரஜினி, மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க மறுத்துவிட்டதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது மாரி செல்வராஜ், தன்னுடைய ஒவ்வொரு படங்களையும் கமர்சியலாக கொண்டு செல்ல மாட்டார். எனவே மாரி செல்வராஜுடன் பணியாற்றினால் தன்னுடைய படம் அந்தளவிற்கு வராது என்று நினைத்து ரஜினி இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.