செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் புதுப்பேட்டை 2 படத்தில் நடிக்க தயாராக இருப்பதாக சோனியா அகர்வால் பேட்டி அளித்துள்ளார்.
நடிகை சோனியா அகர்வால், காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, கோவில் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கதாநாயகியாக பிரபலமடைந்தவர். அதைத் தொடர்ந்து புதுப்பேட்டை, திருட்டுப் பயலே, ஒரு கல்லூரியின் கதை
உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த சோனியா அகர்வால் சமீப காலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் பிரபல இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்து கொண்ட சோனியா அகர்வால் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செல்வராகவனிடம் இருந்து விவாகரத்து பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக செல்வராகவன், புதுப்பேட்டை 2 திரைப்படத்தை இந்த வருடம் தொடங்க இருப்பதாக தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்திருந்தார். அதன்படி படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை சோனியா அகர்வால் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில், புதுப்பேட்டை 2 படத்தில் நடிக்க அழைத்தால் நடிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் செல்வராகவனுடன் இணைந்து பணியாற்றுவதில் தனக்கு பிரச்சனை எதுவும் இல்லை எனவும் கூறியிருக்கிறார். அதே சமயம் புதுப்பேட்டை 2 படத்தில் நடிப்பதற்காக இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.