சின்னத்திரை புகழ் ரியோ ராஜ் நடிப்பில் உருவான காதல் திரைப்படமான ஜோ இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பெரிய அளவுக்கு எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லாமல் வெளிவந்த திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இன்ஜினியரிங் கல்லூரி மாணவரான ரியோ ராஜ் கல்லூரி நாட்களில் நாயகி மாளவிகாவை துரத்தி துரத்தி காதலிக்கிறார். அவருடைய காதல் வெற்றியும் அடைகிறது. இந்த காதல் பிரச்சனையில் நாயகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். அதன் பின்னர் வாழ்க்கையில் எந்த ஒரு பிடிப்பும் இன்றி குடிகாரனாக மாறி சுற்றிக் கொண்டிருக்கிறார் நாயகன் ரியோ. அவரது வாழ்க்கையில் வேறொரு பெண்ணுடன் திருமணம் நடக்கிறது. ரியோவின் கடந்த கால வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் இந்த வாழ்க்கையில் இடையூறுகளாக மாறுகின்றன. இந்த பிரச்சனைகள் எல்லாம் எப்படி தீர்ந்தது என்பதை அழகாக சொல்லி இருக்கும் திரைப்படம் தான் ஜோ. ஒரு சாதாரண காதல் திரைப்படத்தை போலவே இப்படமும் நாயகன், நாயகி, கல்லூரி வாழ்க்கை என தொடங்கி மெல்ல மெல்ல ஒரு அழகான படமாக மாறுகிறது. படத்தின் முதல் பாதியில் காமெடி கலந்த காதல் காட்சிகள் என அனைத்தும் ரசிக்கும் ரகமாக அமைந்துள்ளது. இது ஒரு சிறப்பான முதல் பாதியாக ரசிகர்களை என்டர்டெயின் செய்கிறது. கலகலப்பாக சென்று கொண்டிருக்கும் திரைக்கதையில் அனைவரையும் கலங்க வைக்கும் படியான ஒரு இன்டர்வெல் பிளாக். முதல் பாதி காமெடி கலந்த காதல் படமாக நகர இரண்டாம் பாதி எமோஷனலான பீல் குட் திரைப்படமாக மாறுகிறது. படத்தின் ஹைலைட்டாக யாரும் எதிர்பார்க்காத ஒரு கிளைமாக்ஸ் காட்சி ரசிகர்களின் பாராட்டைப் பெறுகிறது. இயக்குனர் ஹரிஹரன் ராம், தயாரிப்பாளர்களான டாக்டர் அருள் ஆனந்த் மற்றும் மேத்யூ ஆனந்த் ஆகியோர்
கமர்சியல் விஷயங்களை நம்பி களமிறங்காமல் நல்ல தரமான கதையம்சத்தை தேர்வு செய்ததன் மூலம் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளனர். வருண் கே ஜி இதற்கு படத்தொகுப்பு செய்துள்ளார். பேச்சுலர் படத்தின் மூலம் பிரபலமான இசையமைப்பாளர் செந்தில்குமார் தான் இப்படத்துக்கும் இசையமைத்துள்ளார். பாடல்கள் மற்றும் பின்னணி இசையிலும் ஸ்கோர் செய்கிறார் இவர்.
படத்தைப் பார்த்த பலரும் சமூக வலைதள பக்கங்களில் பாராட்டுகளை குவித்து வருகின்றனர். முழுக்க முழுக்க ஒரு நல்ல காதல் படம் பார்த்த அனுபவத்தை கொடுத்துள்ள ஜோ படத்திற்கு ரசிகர்களின் பாராட்டு மழை மேலும் ஒரு பக்க பலமாக அமைந்துள்ளது.