தேசிங்கு பெரியசாமியுடன் இணையும் சிம்பு
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. தற்போது சிம்பு, சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை உள்ளிட்ட படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடித்து வருகிறார். இதில் சிம்புவுடன் கவுதம் மேனன், கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். படப்பிடிப்பு நிறைவு அடைந்து, பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சிம்பு நடிக்க உள்ள அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதன்படி, இப்படத்தை துல்கர் சல்மானை வைத்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளதாகவும், படத்திற்கு அனிருத் இசை அமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தை கமல் சார்பில் ராஜ் கமல் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குமுன்பு ரஜினியை வைத்து, தேசிங்கு பெரியசாமி படம் இயக்கப் போவதாக இணையத்தில் தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.