நடிகர் ஜெயம் ரவியின் அண்ணனும் பிரபல இயக்குனருமான மோகன் ராஜா, தமிழ் சினிமாவில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான ஜெயம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். தொடர்ந்து தம்பி ஜெயம் ரவியின் நடிப்பில் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்பிரமணியம், தில்லாலங்கடி உள்ளிட்ட படங்களை இயக்கினார். மேலும் விஜய் நடிப்பில் வேலாயுதம் திரைப்படத்தையும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வேலைக்காரன் திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். இதற்கிடையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தனி ஒருவன் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார் மோகன் ராஜா. இந்தப் படம் மோகன் ராஜாவுக்கும் ஜெயம் ரவிக்கும் முக்கியமான படமாக அமைந்தது. அந்த அளவில் இப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி மாபெரும் பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். படத்தில் வில்லனாக அரவிந்த்சாமி நடித்திருந்தார். அரவிந்த்சாமி இப்படத்தில் ஏற்று நடித்த சித்தார்த் அபிமன்யு என்ற கதாபாத்திரம் இன்று வரையிலும் பேசப்படுகிறது. மேலும் ஒரு மாஸான ட்விஸ்ட் நிறைந்த கிளைமாக்ஸ்-ஐ படத்தில் வைத்திருந்தார் மோகன் ராஜா.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனி ஒருவன் 2 படத்தை மோகன் ராஜா இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 ஏப்ரல் மாதத்தில் தொடங்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
ஆனால் தற்போது ஜெயம் ரவிக்கு கால்ஷீட் இல்லாத காரணத்தால் தனி ஒருவன் 2 படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாம். ஏனென்றால் ஜெயம் ரவி, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் கமிட்டாகியுள்ளதால், இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் முடிவடைந்த பிறகு தனி ஒருவன் 2 படத்தில் நடிப்பாராம். அதற்காக ஜெயம் ரவி 2024 டிசம்பர் வரையில் டைம் வேண்டும் என அண்ணன் மோகன் ராஜாவிடம் கூறியுள்ளாராம். இதனால் மோகன் ராஜா அப்செட்டில் இருந்தாலும் தம்பியின் நிலைமையை புரிந்து கொண்டு இதற்கிடையில் வேறொரு ப்ராஜெக்டை கையில் எடுக்க உள்ளாராம். அந்த வகையில் மோகன் ராஜா இயக்க உள்ள புதிய படத்தில் ஹீரோ யார்? ஹீரோயின் யார்? போன்ற அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.