நடிகர் சூர்யா பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் கங்குவா படத்திற்கு பிறகு தனது 44வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பீட்சா, ஜிகர்தண்டா, பேட்ட உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார். கேங்ஸ்டர் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தை சூர்யாவின் 2D நிறுவனமும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இதற்கு ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைக்கும் பணிகளை கவனிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் அடுத்த அடுத்த போஸ்டர்கள் வெளியாகி வரும் நிலையில் நடிகர் சூர்யா மாஸான லுக்கில் நடித்து வருகிறார். அவருடன் இணைந்து பூஜா ஹெக்டே, கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், ஜெயராம் உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழுவினர் சார்பில் ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன் பின்னர் உறியடி விஜயகுமார், சூர்யா 44 படத்தில் நடித்ததாகவும் ஒரு சில காரணங்களால் அவர் விலகி விட்டதாகவும் சொல்லப்பட்டது. சமீபத்தில் கூட நடிகர் பிரகாஷ்ராஜ் இந்த படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் கசிந்திருந்தன. இந்நிலையில் மேலும் ஒரு நடிகர் சூர்யா 44 படத்தில் இணைந்துள்ளதாக புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. அந்த நடிகர் வேறு யாருமில்லை. நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் தான். அப்பா ஜெயராமும் மகன் காளிதாஸும் இணைந்து ஒரே படத்தில் நடிப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது. சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே அந்தமான், ஊட்டி போன்ற பகுதிகளில் நடந்து வந்த நிலையில் தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.