நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து ராயன் திரைப்படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க தனுஷே இந்த படத்தை இயக்கியுள்ளார். அதன்படி தனுஷின் ஐம்பதாவது படமான இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்து அதிகமாக இருந்து வருகிறது. அதே சமயம் இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், செல்வராகவன், அபர்ணா பாலமுருளி, பிரகாஷ்ராஜ், துஷாரா விஜயன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களுமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களாகும். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் இப்படமானது தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. முதலில் இந்த படத்தை 2024 ஏப்ரல் மாதத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். பின்னர் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக இந்த படமானது ஜூன் 6ஆம் தேதி வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் தேவா, ராயன் திரைப்படத்தில் வில்லனாக நடிக்க மறுத்த காரணத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “ராயன் படத்தில் வரும் வில்லன் கதாபாத்திரம் வடசென்னை வட்டார மொழியை சரளமாக பேசும் கதாபாத்திரம். தனுஷ் என்னிடம் வில்லனாக நடிக்க கேட்டபோது நான் மறுத்துவிட்டேன். ஏனென்றால் வில்லன் கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிக்க வேண்டும். என்னால் அப்படி நடிக்க முடியுமா என்பது தெரியவில்லை. அதனால் தான் நான் மறுத்துவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.