விக்ரம் நடிப்பில் உருவாகி இருந்த தங்கலான் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இந்த படத்தினை பா. ரஞ்சித் இயக்கி இருந்தார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருந்த இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்திருந்தார். கோலார் தங்க வயலில் தங்கம் கண்டறியப்படுவது சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருந்த இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் கிட்டத்தட்ட 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. அடுத்தது இந்த படத்தில் புத்த மதத்தை பற்றி புனிதமாகவும் வைணவர்களை பற்றி நகைச்சுவையாகவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது எனவும் இது போன்ற வைணவர்களை அவமதிப்பது தொடர்பான காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் இந்த படம் ஓடிடியில் வெளியான பின்பு இரு பிரிவினருடைய மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இந்த படத்தினை ஓடிடியில் வெளியிட தடை விதிக்குமாறு திருவள்ளுரை சேர்ந்த பொற்கொடி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று (அக்டோபர் 21) விசாரணைக்கு வந்த நிலையில், இந்த படம் தணிக்கை சான்று பெற்ற பின்பும் திரையரங்குகளில் வெளியாகிவிட்ட பின்பும் ஓடிடியில் வெளியாக எந்தவித தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தகவல் படக்குழுவினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. எனவே விரைவில் தங்கலான் திரைப்படம் ஓடிடியில் வெளியிடப்படும் எனவும் இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -