இயக்குனர் பாலா சேது படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். அதைத்தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியான ஒவ்வொரு படங்களுமே தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அடுத்தபடியாக இவரது இயக்கத்தில் வணங்கான் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், மிஸ்கின், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். வி ஹவுஸ் ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜிவி பிரகாஷ் மற்றும் சாம் சி எஸ் இதற்கு இசையமைத்துள்ளார்கள். இந்த படமானது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் பாலாவின் 25 ஆம் ஆண்டு கலைப்பயண விழாவும் கடந்த டிசம்பர் 18ஆம் தேதி சென்னையில் நடத்தப்பட்டது. இந்த விழாவில் சிவக்குமார், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அப்போது இந்த விழாவில் நடிகர் சிவகுமார், பாலாவிடம் சில கேள்விகளைக் கேட்க அதற்கு பாலா சுவாரஸ்யமாக பதில் அளித்திருந்தார். அதன்படி சிறுவயதில் உங்களை தத்து கொடுத்த பின்னர் அம்மாவிடம் வளராதது கஷ்டமாக இருந்ததா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஆமாம். அதனால் சிறு வயதிலேயே மனரீதியாக பாதிக்கப்பட்டேன் என்று பதிலளித்தார் பாலா. பிறகு சினிமாவில் நடிகைகள் யாராவது உங்களை காதலித்திருக்கிறார்களா? என்ற கேள்விக்கு, இரண்டு, மூன்று நடிகைகள் காதலித்தார்கள்.
ஆனால் அவர்கள் தற்போது திருமணமாகி குழந்தைகளுடன் இருப்பதால் அவர்களின் பெயர்களை சொல்ல மாட்டேன் என்று கூறினார். அதே சமயம் ரஜினி மற்றும் கமலை வைத்து படம் எடுப்பீர்களா? என்ற கேள்விக்கு அதற்கு வாய்ப்பே இல்லை. “அவர்களுடைய பாதை வேறு. என் பாதை வேறு” என்று பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவின் இரு பெரும் ஜாம்பவான்களான ரஜினி மற்றும் கமலை இயக்க ஒவ்வொரு இயக்குனர்களும் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இயக்குனர் பாலா, அவர்களை வைத்து படம் இயக்க மாட்டேன் என்று கூறியிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.
- Advertisement -