இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர். இவருடைய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அதன்படி கடந்த ஆண்டு இவரது இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தற்போது இவர் இயக்கி வரும் விடுதலை இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்து வருகிறது. இருப்பினும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்த பாடில்லை. அதேசமயம் இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சூர்யாவின் நடிப்பில் வாடிவாசல் திரைப்படத்தை இயக்கப் போவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. அதைத்தொடர்ந்து படத்தின் முன்னணி வேலைகள் நடைபெற தொடங்கின. நடிகர் சூர்யாவும் காளைகளை அடக்கும் பயிற்சியை மேற்கொண்டார். பின்னர் வெற்றிமாறன் விடுதலை 2 திரைப்படத்தில் பிஸியாகி விட்டதால் வாடிவாசல் திரைப்படம் தொடர்ந்து தாமதமாகி கொண்டே போகிறது. வெற்றிமாறனிடம் பலரும் வாடிவாசல் திரைப்படம் எப்போது தொடங்கும் என்று பொது நிகழ்ச்சிகளிலும் கூட கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் தான் இயக்குனர் வெற்றிமாறன் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வாடிவாசல் திரைப்படம் நிச்சயம் தொடங்கும் என்று தெரிவித்துள்ளாராம். எனவே இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வாடிவாசல் திரைப்படத்தில் சூர்யா தவிர நடிகரும் இயக்குனரமான அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.