விடாமுயற்சி படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அஜித்தின் 62 வது படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தை மீகாமன், தடையற தாக்க, தடம் ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கியிருக்கிறார். லைக்கா நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ஆக்சன் கலந்த காதல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். வில்லனாக அர்ஜுன் நடித்துள்ளார். மேலும் ரெஜினா, ஆரவ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படமானது பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. ஏனென்றால் அஜித்தின் துணிவு திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் நடிகர் அஜித்தை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இப்படம் நாளை (பிப்ரவரி 6) திரைக்கு வர தயாராகி வருகிறது. அதே சமயம் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்குமாறு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்த நிலையில் தற்போது அரசு அதற்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி நாளை ஒரு நாள் மட்டும் காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை மொத்தம் 5 காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்துள்ளது.