விடாமுயற்சி வெளியான நாளில் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
அஜித்தின் 62 வது படமாக உருவாகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படம் இன்று (பிப்ரவரி 6) மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இரண்டு வருடங்கள் கழித்து அஜித்தை மீண்டும் திரையில் காணும் உற்சாகத்தில் ரசிகர்கள் பலரும் திரையரங்கிற்கு திரண்டு வந்து விடாமுயற்சி திரைப்படத்தை கொண்டாடி தீர்த்து வருகின்றனர். இந்த படத்தை மகிழ் இயக்க லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இதற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவும் வில்லனாக அர்ஜுனும் நடித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் நடிகை நயன்தாராவின் கணவரும் பிரபல இயக்குனருமான விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில், “நீங்கள் கொடுக்கும் நன்மை மீண்டும் வரும். செயல்முறையை நம்புங்கள்”
என்றும் “சில சமயங்களில் சில விஷயங்கள் எப்படி நடக்கும் என்பதை பற்றி நீங்கள் கவலைப்படுவதை நிறுத்தும்போது மேஜிக் நடக்கும்” என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏனென்றால் அஜித்தின் 62 வது படத்தை முதலில் விக்னேஷ் சிவன் தான் இயக்க இருந்தார். அதன்பின் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் அப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் வெளியேற அவருக்கு பதிலாக மகிழ் திருமேனி களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.