நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். அதே சமயம் இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து பெயர் பெற்றவர். பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்து பட்டையை கிளப்பி இருந்தார் விஜய் சேதுபதி. இவர் தற்போது ட்ரெயின், ஏஸ் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இருப்பினும் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் படங்களை விட வில்லனாக நடிக்கும் படங்கள் தான் அதிக வசூலை வாரி குவித்து வெற்றி பெறும். இந்நிலையில் கடந்த ஜூன் 14 அன்று விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த மகாராஜா திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. குரங்கு பொம்மை படத்தின் இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இந்த படத்தை இயக்க பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் படத்தை தயாரித்து இருந்தது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஆரம்பத்தில் தான் ஹீரோவாக நடித்த இந்த படம் வெற்றி பெறுமா? என்று விஜய் சேதுபதி கவலைப்பட்டாராம். ஆனால் நாளுக்கு நாள் இந்த படத்திற்கு ரசிகர்களின் ஆதரவும், வசூலும் அதிகரித்து வருவதால் விஜய் சேதுபதி தற்போது மகிழ்ச்சியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே சமூக வலைதளங்களில் பலரும் “விஜய் சேதுபதி ஹேப்பி அண்ணாச்சி” என்பது போல் கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் மகாராஜா திரைப்படம் தற்போது வரை 32 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக வடக்குழுவினர் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.