ஊடகங்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் வார்னிங் கொடுத்துள்ளது.
அதாவது இப்போதெல்லாம் பிரபலங்களின் மரணங்களை ஊடகங்கள் பலரும் நேரடையில் போட்டுக்காட்டி விடுகிறார்கள். இது ஒரு பக்கம் நல்ல விஷயமாக இருந்தாலும், உறவினரை இழந்த குடும்பத்தினர் கதறும் காட்சிகளை காட்ட துடிக்கிறார்கள் ஊடகத்தினர்கள். சாவு வீட்டிற்கு வந்து பிரபலங்களையும் சும்மா இருக்க விடுவதில்லை. அவர்களை அழ கூட விடாமல் பேட்டி எடுத்து, பார்வையாளர்களை சம்பாதிப்பது போன்ற விஷயங்கள் முகம் சுளிக்க வைக்கின்றன. இது தொடர்பாக ஏற்கனவே பிரபலங்களின் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தாலும் மீண்டும் மீண்டும் அதே நோக்கத்துடன் செயல்படுவது ஊடகத்தினர் மீது அதிருப்தியை ஏற்படுத்துகிறது. எனவே இது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், “ஊடக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். அன்பிற்குரிய ஊடக நண்பர்களுக்கு மரணம் என்பது எல்லோருக்கும் நிகழக்கூடிய ஒன்று. அதை இயற்கையின் தீர்மானத்திற்கு உட்பட்டது என்பதை இவ்வுலகில் பிறந்த எல்லா உயிர்களும் அறியும். ஆறறிவு கொண்ட மனிதன் இன்னும் சற்றே அதிகமாகவே அதை உணர்ந்தவன். மரண வீடுகள் மௌனிக்கப்படவும், துயரத்தை பகிர்ந்து கொள்ளவும், துயர் கொள்ளவும் வேண்டியவை. யாரோ இறந்து போனார்.. எனக்கும் அவருக்கும் என்ன? ஒருவரின் அழுகையோ துயரத்தை வெளிப்படுத்தும் வித்தையோ ஏன் இவ்வளவு வெட்ட வெளிச்சமாக்க வேண்டும். ஒருவரின் துயர் நமக்கு காசாக தான் வேண்டுமா? பார்வையாளர்களைக் கொண்டு வரும் என்ற எண்ணம் எத்தனை இரக்கமற்றது கொடியது. நாம் மற்றொருவரின் மரணத்தையோ இயலாமையையோ கொண்டாடும் மனநிலைக்கு வந்து விட்டோமா என்ற கவலை வலுக்கிறது. ஊடகங்கள் கார்களின் உள்ளேயும் நடு வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் உடலையும் ஏன் படம் பிடிக்க வேண்டும்? அதுவும் முண்டியடித்துக் கொண்டு துக்க முகங்களை காட்டுவதில் அப்படி என்ன பேரானந்தம் கிடைத்துவிடப் போகிறது? இனிவரும் காலங்களில் ஊடக அனுமதி, இறப்பு வீடுகளில் கூடவே கூடாது என்பதை முன்னெடுக்க வேண்டும். அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கங்களும், பத்திரிகை தொடர்பாளர் யூனியனும் இணைந்து இதற்கு ஒரு நல்ல தீர்வை காண்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. சக மனிதர்களின் இழப்பை நம் வீட்டு இழப்பாக கருதி துயர் விசாரிக்க வரலாம் கையில் கேமரா இல்லாமல். இனிவரும் காலங்களில் இச்செயல் முற்றிலும் தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து ஊடகங்களுக்கும் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் இவ்வேண்டுகோளை முன் வைக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.