கார்த்தி 29 படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கார்த்தி கடைசியாக மெய்யழகன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து இவர் சர்தார் 2 போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்த வகையில் இவர் டாணாக்காரன் படத்தின் இயக்குனர் தமிழ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் நடிகர் கார்த்தியின் 29 வது படமாகும். இந்த படத்திற்கு தற்காலிகமாக கார்த்தி 29 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. மேலும் இந்த படமானது கடல் கொள்ளையர்களை மையமாக வைத்து பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகப் போவதாகவும் சொல்லப்படுகிறது. இதன்படி இப்படத்தின் படப்பிடிப்புகள் 2025 மே மாதத்தில் தொடங்கும் என தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இது மட்டுமில்லாமல் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகும் எனவும் இதன் படப்பிடிப்பை ராமேஸ்வரத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என சமீபகாலகமாக பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது இந்த படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும், இவர் மீனவ பெண்மணியாக நடிக்க உள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.