திண்டுக்கல் இளைஞரிடம் ஆன்லைன் டிரேடிங் மூலம் ரூ.39 லட்சம் மோசடி வழக்கில் 2 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பிள்ளையார் நத்தத்தை சேர்ந்தவர் சரவணக்குமார்(35). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம்
இவரது முகநுால் பக்கத்தில் ஆன்லைன் டிரேடிங் மூலம் குறைந்த பணத்தை முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கவர்ச்சிகரமான விளம்பரத்தை பார்த்துள்ளார்.
இதனையடுத்து அந்த விளம்பரத்தில் உள்ள அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டிருக்கிறார். எதிர் முனையில் பேசிய மர்ம நபர் பிறமொழி கலந்த தமிழில் பேசி சரவணக்குமாரிடம் பேசினார். தொடர்ந்து பேசி பழகிய நபர் சரவணக்குமாருக்கு ஆன்லைன் டிரேடிங் குறித்த விபரங்களை தெரிவித்துள்ளார். இதை நம்பிய சரவணக்குமார் மர்ம நபர் கூறிய 2 வங்கி கணக்கிற்கு கொஞ்சம் கொஞ்சமாக ரூ.39 லட்சத்தை ஆன்லைன் மூலமாக அனுப்பி உள்ளார்.
பணத்தை பெற்று கொண்ட மர்ம நபர் சில நாட்களில் தன்னுடைய அலைபேசி எண்ணை சுவிட்ச் ஆப் செய்து தலைமறைவானார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சரவணக்குமார் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் தான் ஏமாற்றப்பட்டது குறித்து புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிர படுத்தினர்.
இன்ஸ்பெக்டர் விக்டோரியா தலைமையிலான போலீசார் சரவணக்குமார் பணத்தை
அனுப்பிய வங்கி கணக்கு எண் எந்த ஊரில் உள்ளது. அது யாருடைய வங்கிக் கணக்கு என ஆய்வு செய்தனர். அப்போது கர்நாடகாவை சேர்ந்த கல்லுாரி மாணவர்கள் ஆயுஷ்(20), ஹர்ஷா(20) என்பவர்களுடையது என தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் கர்நாடகாவிற்கு சென்று அந்த 2 கல்லூரி மாணவர்களை
கைது செய்து திண்டுக்கல் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இருவரிடம் நடத்திய விசாரணையில் நண்பர் ஒருவர் தங்களுடைய வங்கி எண்களை பெற்று கொண்டு அவர் தான் இந்த காரியத்தை செய்ததாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடவுளே..! கார் மீது மோதிய பேருந்து: 5 எம்பிபிஎஸ் மாணவர்கள் பலி