வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 16 பவுன் கொள்ளை – தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிர்ச்சி
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த அதிராம்பட்டினத்திலுள்ள முத்தம்மாள் தெருவில் வசித்து வந்தவர் சவுந்தரராஜன். இவருக்கு வயது 59. இவர் வெளிநாட்டில் பணி செய்து விட்டு தற்போது சொந்த ஊரில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

இவரது மனைவி ரேகா (வயது 45), மகள் சோனா (வயது 19). இந்த நிலையில் நேற்று சவுந்தரராஜன் வழக்கம்போல் பெட்டிக்கடைக்கு சென்று விட்டார். மனைவி வெளியூர் சென்றார். வீட்டில் சோனா மட்டும் தனியாக இருந்தார்.
இதனை பார்வையிட்டுக் கொண்டிருந்த மர்மநபர்கள் சிலர் இரவில் வீட்டின் பின்புறம் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். சத்தம் கேட்டு சோனா வெளியே சென்று பார்த்தார்.
அங்கு மறைந்திருந்த மர்மநபர்கள் திடீரென சோனாவின் வாயை துணியால் கட்டி கழுத்தில் கத்தியை வைத்து பீரோ சாவியை கொடு, இல்லையென்றால் உன்னை கொன்று விடுவோம் என மிரட்டினார்கள். இதற்கு என்ன செய்வதென்று தெரியாமல் சோனா சாவியை எடுத்துக் கொடுத்தார்.
சாவியைக் கொடுத்த பிறகு பீரோவில் இருந்த சுமார் 16½ சவரன் தங்க நகை மற்றும் ரூ.9500 பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து கொண்டனர். பிறகு மர்மநபர்கள் சோனாவின் வாயில் இருந்த துணியை எடுத்து கீழே தள்ளிவிட்டு தப்பி ஓட முயன்றனர்.

அப்போது சோனா திருடன்.. திருடன். காப்பாற்றுங்கள் என்று அலறி சத்தமிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்மநபர்கள் தப்பி ஓடி விட்டனர். பின்னர் சோனா நடந்த விவரங்களை தனது தந்தையிடம் கூறினார்.
இச்சம்பவம் குறித்து சோனாவின் தந்தை சவுந்தரராஜன் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.