16வயது சிறுமி வழக்கில் கணவன்- மனைவி உட்பட 6 பேரை அமைந்தகரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
வீட்டில் பணிபுரிந்து வந்த 16 வயது சிறுமி அடித்துக் கொலை; கொடூரமாக சிறுமியை தாக்கி கொலை செய்துவிட்டு ஊதுபத்தி ஏற்றி வைத்து உறவினர் வீட்டுக்கு சென்ற தம்பதியினர்.
சென்னை அமைந்தக்கரை மேத்தா நகர், சதாசிவ மேத்தா தெரு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முகமது நவாஷ்(35). இவர் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றார்.
மேலும், இவருக்கு திருமணமாகி மனைவி நாசியா மற்றும் 6 வயது குழந்தை உள்ளனர். இந்த நிலையில் நவாஸ் வீட்டில் கடந்த ஓராண்டுக்கு (14 மாதங்கள்) முன் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை வீட்டு வேலைக்காக பணியில் அமர்த்தியுள்ளனர். சிறுமி அவரது வீட்டில் தங்கி வீட்டு வேலை பார்த்து வந்துள்ளார்.
தீபாவளி தினத்தன்று நவாஸ் வீட்டில் வேலை செய்து வந்த சிறுமி வேலை முடிந்து பாத்ரூமில் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது நீண்ட நேரமாகியும் குளிக்க சென்ற சிறுமி வெளியே வராததால் சந்தேகமடைந்த நவாஸ் மற்றும் அவரது மனைவி நாசியா இருவரும் ஓடிச்சென்று பாத்ரூம் கதவை தட்டியும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சிறுமி தரையில் மயங்கிய நிலையில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பயத்தில் நவாஸ் வீட்டை பூட்டி விட்டு மனைவி குழந்தையுடன் உறவினர்கள் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
பின்னர், நேற்று வீட்டு உரிமையாளர் முகமது நவாஸ் தனது வழக்கறிஞர் மூலம் சிறுமி இறந்தது குறித்து அமைந்தக்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலின் பேரில் அமைந்தகரை போலீசார் சம்பவயிடத்துக்குச் சென்று பாத்ரூமில் இறந்து கிடந்த சிறுமி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கே.எம்.சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், சிறுமி உடலில் அங்காங்கே அடித்ததற்கான காயங்கள், சிகரெட்டினால் சூடு வைத்த காயங்கள் இருந்தால் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து போலீசார் கணவன்-மனைவி இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் முகமது நவாஸ் அவரது சகோதரி மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை அவரது வீட்டிற்கு வேலை செய்வதற்காக தங்க வைத்துள்ளனர்(வேலைக்கு சேரும் போது சிறுமியின் வயது 14). சிறுமி வேலைக்கு வந்த சில நாட்களில், சிறுமியின் தந்தை காலமானதால் தாயின் அரவணைப்பில் சிறுமி வளர்ந்து வந்ததாக தெரியவந்துள்ளது. மேலும், குடும்ப சூழ்நிலை காரணமாக சிறுமி தனது தாயை பிரிந்து ஓராண்டுக்கும் மேலாக முகமது நவாஸ் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் சிறுமியை அடித்து துன்புறுத்தியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், முகமது நவாஷின் நண்பரான லோகேஷ் என்பவரும் வீட்டுக்கு வரும்போது எல்லாம் சிறுமியை அடித்து கொடுமைப்படுத்தியதும் தெரிய வந்திருக்கிறது.
இந்த நிலையில் தீபாவளி தினத்தன்று காலை சிறுமியை முஹம்மது நவாஸ் அவரது மனைவி நாசியா மற்றும் இவர்களது நண்பரான லோகேஷ் ஆகியோர் சேர்ந்து கொடூரமாக தாக்கி உள்ளனர். இந்த தாக்குதலில் நிலைகுலைந்த சிறுமி மயக்கம் அடைந்து உள்ளார். இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் மூவரும் சேர்ந்து சிறுமியை பாத்ரூமுக்குள் இழுத்துச் சென்று போட்டதும், சில மணி நேரம் கழித்து சென்று பார்த்தபோது சிறுமி உயிர் இழந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதனால் பயந்து போன கணவன் மனைவி சிறுமியை பாத்ரூமில் போட்டுவிட்டு ஊதுபத்தி ஏற்றி வைத்துவிட்டு தங்களது உறவினர்கள் வீட்டிற்கு சென்று பதுங்கி உள்ளனர். பின்னர், லோகேஷ் மூலம் வழக்கறிஞர் ஒருவரை ஏற்பாடு செய்து நேற்று மாலை காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து அமைந்தகரை கணவன் மனைவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த முகமது நவாஸின் நண்பரான லோகேஷ் மற்றும் அவருடைய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். லோகேஷ் மீது விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு கொலை வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் சிறுமியை வேலைக்கு சேர்த்து விட்ட நவாஸ் இன் சகோதரி ஷீபா மற்றும் அதே வீட்டில் பணிபுரிந்த மற்றொரு பணிப்பெண் மகேஸ்வரி ஆகிய ஆறு பேரை அமைந்தகரை போலீஸார் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.