துபாய், சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.5.6 கோடி மதிப்புடைய 8 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனர். அதில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், 3 விமானங்களில் வந்த, 9 கடத்தல் பயணிகளை கைது செய்து, மேலும் விசாரணை.
ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில், தங்கத்துக்கான இறக்குமதி வரி வெகுவாக குறைக்கப்பட்டதால், இந்தியாவில் தங்கத்தின் சில்லறை விற்பனை விலை கணிசமாக குறைந்தது. ஆனால் அடுத்த சில தினங்களில் தங்கத்தின் விலை மீண்டும் படிப்படியாக உயரத் தொடங்கியது.
இந்த நிலையில் ஒன்றிய நிதிநிலை அறிக்கையில், தங்கத்துக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதால், இனிமேல் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்தல் வெகுவாக குறைந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தங்கத்தின் விலை இந்தியாவில் மீண்டும் படிப்படியாக உயரத் தொடங்கியுள்ளதால், கடத்தல் ஆசாமிகள் தங்களுடைய கடத்தல் தொழில்களை மீண்டும் தொடங்கிவிட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து, சென்னைக்கு வரும் விமானங்களில் மிகப்பெரிய அளவில் கடத்தல் தங்கம் கொண்டுவரப்படுவதாக சென்னை தியாகராய நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை தனிப்படை அதிகாரிகள் நேற்று புதன் கிழமை நள்ளிரவில், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை ரகசியமாக கண்காணித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது சிங்கப்பூரில் இருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று சென்னைக்கு வந்தது. அதில் வந்த பயணிகள் வெளியில் வந்த போது, ரகசியமாக கண்காணித்துக் கொண்டிருந்த மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள், அதில் சந்தேகப்பட்ட 3 பயணிகளை நிறுத்தி சோதனை இட்டனர். அதோடு அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்று முழுமையாக பரிசோதித்த போது அவர்களுடைய உள்ளாடைகள் கைப்பைகள் போன்றவைகளில் தங்கக் கட்டிகள், தங்க பேஸ்டுகள், மற்றும் தங்க நகைகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதை அடுத்து அவர்களை கைது செய்து தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்களிடம் மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அடுத்ததாக துபாயில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருக்கும் தனியார் பயணிகள் விமானம், அதைப்போல் இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருக்கும் தனியார் பயணிகள் விமானம் ஆகிய இரு விமானங்களிலும், கடத்தல் குருவிகள் இதை போல் தங்க கட்டிகள் நகைகளுடன் வருவதாக தெரிவித்தனர்.
உடனடியாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், தொடர்ந்து அந்த இரு விமானங்களில் வந்த பயணிகளையும் கண்காணித்து சந்தேகப்பட்ட 6 பயணிகளை நிறுத்தி சோதனை இட்டனர். அவர்கள் கைப்பைகளில் ரகசிய அறைகள் மற்றும் தங்களுடைய ஆடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த தங்க நகைகள், தங்க கட்டிகள் போன்றவைகளையும் பறிமுதல் செய்தனர்.
இந்த சிங்கப்பூர், துபாய், இலங்கை ஆகிய மூன்று விமானங்களில் வந்த 9 பயணிகளிடம் இருந்து, சுமார் 8 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.5.6 கோடி.
இதை அடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பயணிகள் 9 பேரையும் கைது செய்து, சென்னை தியாகராய நகரில் உள்ள அவர்களுடைய அலுவலகத்திற்கு அழைத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் மீண்டும் தங்கக் கடத்தல் அதிகரித்து, ஒரே நாளில் மூன்று விமானங்களில் வந்த ஒன்பது பயணிகளிடம், ரூ.5.6 கோடி மதிப்புடைய 8 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.