ஈரோட்டில் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்களிடம் பணம் வசூலித்து சுமார் 1 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த இளம் பெண்ணை ஈரோடு குற்றபிரிவு போலீசார் கைது செய்தனர்.ஈரோடு கொங்கம்பாளையத்தை சேர்ந்த அழகர்சாமி என்பவர், தனது மகள் கனகா ஸ்ரீ.யுடன் இணைந்து ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் அலுவலகம் அமைத்து ஏலச்சீட்டு நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக முறையாக சீட்டுகளை நடத்தி வந்ததால், வீரப்பன்சத்திரம், வைராபாளையம், பெரியசேமூர், அசோகபுரம் என சுற்று பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர், 50 ஆயிரம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை வாராந்திர மற்றும் மாதாந்திர ஏலச்சீட்டுகளில் சேர்ந்து பணம் கட்டி வந்துள்ளனர். இதனிடையே, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏலச்சீட்டு முதிர்வடைந்த வாடிக்கையாளர்களுக்கு தொகையை வழங்காமல் அதற்கான வட்டி தொகையை தருவதாகவும், அந்த வட்டி தொகையை புதிய சீட்டுகளில் வரவு வைத்து கொள்வதாகவும் கூறி உள்ளார்.
இதனால் அவரை நம்பி தொடர்ந்து பணம் செலுத்திய பொதுமக்களிடம், சில வாரங்களுக்கு முன் தனது வீட்டை விற்பனை செய்து பணத்தை அனைவருக்கும் வழங்கி விடுவதாக உறுதி அளித்துள்ளார். ஆனால், வீட்டை விற்பனை செய்த அழகர்சாமி பணத்தை வழங்காமல் குடும்பத்துடன் தலைமறைவானதாக கூறப்படுகிறது. அவரது செல்போன் எண்ணும் அணைக்கப்பட்டதால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாடிக்கையாளர்கள் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து கடந்த மாதம் புகார் மனு அளித்தனர்.
இது தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்களில் பாலு என்பவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ஈரோடு மாவட்ட குற்ற பிரிவு போலீசார் தலைமறைவான தந்தை மகளை தேடி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் கனகாஸ்ரீ.யை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் 40.க்கும் மேற்பட்டோரிடம் சுமார் 1 கோடி ரூபாய் அளவிற்கு பணம் வசூலித்து மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அழகர்சாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
பணியிடத்திற்கே சென்று பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை: ஐபிஎஸ் அதிகாரி சஸ்பெண்ட்..!