ஒருதலை காதலை கண்டித்ததால் Youtube பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து வீசிய இளைஞர் கைது
கடலூர் – புதுச்சேரி எல்லை பகுதியில் தமிழகத்தில் அமைந்துள்ள குட்டியாங்குப்பத்தை சேர்ந்தவர் முருகானந்தம் தனியார் மருத்துவமனை ஊழியர். இவருக்கு 2 மகள்கள் உள்ள நிலையில். நேற்று நள்ளிரவு முருகானந்தம் தனது குடும்பத்தோடு வீட்டில் கதவை திறந்து வைத்து வீட்டு வாசலில் கிரில் கதவை சாற்றி தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று முருகானந்தம் வீட்டிற்கு வெளியே பயங்கர சத்தம் கேட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த முருகானந்தம் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் அவசர அவசரமாக எழுந்தனர். அப்போது வீட்டில் வெளியே பழுதாகி இருந்த மின்விசிறி வெடித்திருக்கலாம் என சந்தேகப்பட்டு வெளியில் வரும் நேரத்தில் மீண்டும் ஒரு பயங்கர சத்தம் கேட்டது. அப்போது வீடு சற்று அதிர்வு ஏற்பட்டதோடு புகை மண்டலமாக காட்சியளித்தது.
இதனால் சந்தேகம் அடைந்த முருகானந்தம் வெளியில் வந்து பார்த்தபோது சணல், உடைந்த கண்ணாடி துண்டுகள் மற்றும் சிறிய ஆணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் வீட்டு வாசலில் இருந்த ஸ்கிரீன் துணியும் கருகி இருந்தது. அப்போதுதான் தெரிந்தது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகள் வீசி சென்றது தெரியவந்தது. இதனால் கடும் அதிர்ச்சிடைந்த முருகானந்தம் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் உடனடியாக தூக்கணாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் கைப்பற்றி சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் 3 வாலிபர்களை போலீசார் பிடித்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதில் புதுவை மாநிலம் கரையாம்புதூர் பனையடிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சுனில் (வயது 21). இவரது நண்பர்கள் சிங்கர்குடி புதுக்கடை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 22) மற்றும் 16 வயது சிறுவன் என தெரியவந்தது. மேலும் சுனில், முருகானந்தத்தின் 2-வது மகளை காதலிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சடைந்த சிறுமி நடந்த சம்பவம் குறித்து தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து முருகானந்தம் சுனிலை அழைத்து கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளார். இந்த நிலையில் நேற்று சுனிலுக்கு பிறந்தநாள் வந்தது. அப்போது தனது நண்பர்களுக்கு பார்ட்டி வைத்து மது குடித்து கொண்டாடியிருக்கிறார்கள். அப்போது நடந்த சம்பவத்தை கூறி கடும் கோபம் கொண்டு முருகானந்தம் மற்றும் அவரது குடும்பத்தினரை பழிக்கு பழி வாங்க வேண்டும் என எண்ணுகிறார்கள். பிறகு யூடியூப்பில் எப்படி நாட்டு வெடிகுண்டு தயாரிப்பது என்பதனை பார்க்கின்றனர்.
பின்னர் சணல், உடைந்த கண்ணாடி துண்டுகள், சிறிய ஆணிகள் வெடி பொருட்கள் போன்றவற்றை வைத்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து உள்ளனர். பின்னர் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் நள்ளிரவில் முருகானந்தம் வீட்டிற்கு வந்து, இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை அடுத்தடுத்து வீசி விட்டு தப்பித்து சென்றதாக விசாரணையில் தெரியவந்தது. ஆனால் வெடிகுண்டுக்கு மேல் சுற்றும் சணலை இறுக்கமாக சுற்றாத காரணத்தினால் பெரிய அளவில் வெடி விபத்து நடைபெறாமல் சிறிய அளவில் மட்டுமே அது வெடித்து சிதறி உள்ளது.
இது குறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து சுனில் (வயது 21), ராஜ்குமார் (வயது 22) மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 3 பேரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் போலீசார் பிடிக்கச் சென்றபோது சுனில் ஓடியதால் கீழே விழுந்ததில் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சம்பவம் நடந்து 12 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடித்த போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பாராட்டு தெரிவித்தார். கடலூர் அருகே காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டில் யூடியூப்பில் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.