சாலையின் ஓரமாக நிற்க சொன்னவரை கடுமையாக தாக்கிய அன்னை வயலட் கல்லூரி மாணவர்கள்..
அம்பத்தூரில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் 50 பேர் சேர்ந்து அதே பகுதியை சேர்ந்த அசோக் என்பவரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அம்பத்தூர் மேனாம்மேடு கருக்கு பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ள அன்னை வயலட் எனும் தனியார் கல்லூரியில் சுமார் 3000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரியின் வாசலில் நின்று கொண்டு, அப்பகுதிவாசிகள் இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாத அளவிற்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
அப்போது அதே பகுதியை சேர்ந்த அசோக் என்பவர் தனது குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு மீண்டும் மனைவியுடன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது சாலையில் நின்று கொண்டிருந்த மாணவர்களை சாலையின் ஓரமாக நிற்குமாறு கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் அசோக்கை தாக்கினர். மேலும், அங்கிருந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் அசோக்கை கல்லூரிக்குள் இழுத்துச் சென்று தலை, முகம், கழுத்து, மார்பு, வயிறு உள்ளிட்ட உடம்பின் அனைத்து பகுதிகளிலும் பலமாக தாக்கியுள்ளனர்.
அசோக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருதய நோயால் ஆஞ்சியோ சிகிச்சை பெற்ற நிலையில் அவரை மாணவர்கள் கடுமையாக தாக்கியதால் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அவ்வழியாக வந்த டாடா சுமோ வாகனத்தையும் மாணவர்கள் அடித்து உடைத்துள்ளனர். இந்த சம்பவத்தின் காட்சிகள் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த அப்பகுதி வாசிகள் கல்லூரிக்கு முன்பு நின்று கல்லூரிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதுபோன்ற செயலில் ஈடுபட்ட மாணவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தற்போது கல்லூரி நிர்வாகம் அசோக்கை தாக்கிய 7 மாணவர்களுக்கு கல்லூரியில் இருந்து TC கொடுத்துவிட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. புகாரின் பேரில் அம்பத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அங்கு ஏற்கனவே அம்பத்தூர் காவல் நிலையத்தை சேர்ந்த காவலர் ஒருவர் நின்று கொண்டிருந்த நிலையில் அவர் முன்னிலையிலேயே அசோக்கை 50க்கும் நேற்பட்ட மாணவர்கள் அடித்து இழுத்து சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.