16 வயது சிறுவன் பைக் ஓட்டி முதியவர் மீது மோதி விபத்து சம்பவம் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாய் கைது; சிறுவன் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு.சென்னை சாலிகிராமம் காந்தி நகரைச் சேர்ந்தவர் 76 வயது முதியவர் சம்பத். கடந்த 11 ஆம் தேதி இரவு அவர் மார்கெட்டுக்கு சென்று விட்டு வீடு திரும்பி சென்றார். அப்போது சாலிகிராமம் அம்பேத்கார் தெருவில் நடந்து சென்றார். அப்போது வேகமாக வந்த பைக் ஒன்று சம்பத் மீது மோதியது. அவர் சாலையில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் அவருக்கு மூக்கு, நெற்றியில் ரத்தகாயம் வலது கையில் மணிகட்டில் உள்காயமும் ஏற்பட்டது.
தகவல் அறிந்து அசோக்நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 16 வயது சிறுவன் பைக்கை ஓட்டி வந்தது தெரிய வந்தது.
பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவம் குறித்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தனர். அதில் பைக்கை வேகமாக ஓட்டி சென்று சாலையோரமாக நடந்து சென்ற முதியவர் மீது மோதுவது பதிவாகி இருந்தது. இதனை கைப்பற்றி போலீசார் 16 வயது சிறுவன் மற்றும் பைக்கின் உரிமையாளர் தாயார் ரேவதி நரசிம்மன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதன் பிறகு தாயார் ரேவதி நரசிம்மனை போலீசார் கைது செய்து காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர். சிறுவனை கைது செய்து அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.