நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதல் – ஊர் காவல் படை காவலர் அரிவாளால் வெட்டி கொலை:
தேனி மாவட்டம் கூடலூரில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஊர் காவல் படை காவலரை அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லேப்டாப்பை விலைக்கு வாங்கிய நண்பர் பணம் தராததால் கொலை செய்ததாக கூறி நண்பர் காவல் நிலையத்தில் சரணடைந்து உள்ளார்.

தேனி மாவட்டம் கூடலூர் முத்தையர் தெருவை சேர்ந்த அய்யனார் என்பவர் மகன் நாகேந்திரன் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார். இவரது நண்பரான புதூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் உடன் நீண்ட நாட்களாக பழகி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நாகேந்திரன் தனது பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடும் போது அங்கு வந்த பிரகாசிடம் நாகேந்திரன் தனது லேப்டாப்பிற்கு பணம் தராததால் திருப்பித் தரும்படி கேட்டுள்ளார்.
அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்ப்பட்டு பிரகாஷ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் நாகேந்திரனை சராமாரியாக வெட்டி தாக்கி உள்ளார். அதில் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து சென்ற கூடலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல் நிலையத்திற்கு சரணடைய வந்த பிரகாஷ் அரிவாளை போலீசாரிடம் ஒப்படைத்து விட்டு நாகேந்திரனிடம் தான் விலைக்கு வாங்கிய லேப்டாப்பை திருப்பி கேட்டதால் கொடூரமாக வெட்டி கொலை செய்து விட்டதாக தகவல் கூறி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மேலும் கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட மோதலில் ஊர்க்காவல் படை காவலரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது.