நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே பி கே ஜெயக்குமாரின் சந்தேக மரணம் பற்றி இன்று சிபிசிஐடி போலீசார் திசையன்விளை அருகே அவரது தோட்டத்தில் 50க்கும் மேற்பட்ட தடயவியல் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரை சுத்துபுதூரை சேர்ந்தவர் கே.பி.கே ஜெயக்குமார் தனசிங் (60). நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரான இவர் கடந்த 4ம்தேதி அவரது வீட்டின் தோட்டத்தில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் உடல் கருகி மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அவர் இறப்பதற்கு முன் எழுதிய கடிதங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான 11 தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
தொடர்ந்து ஜெயக்குமாரின் உறவினர்கள், நண்பர்கள், தெரிந்த நபர்கள் என கடிதத்தில் குறிப்பிட்ட நபர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஜெயக்குமார் எப்படி இறந்தார் என உறுதியான தகவல் தெரியாததால் சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக டிஜிபிமாற்றி உத்தரவிட்டதை தொடர்ந்து சிபிசிஐடி ஆய்வாளர் உலக ராணி தலைமையிலான வள்ளியூர் டிஎஸ்பி யோகேஷ் குமார் ஆகியோர் கொண்ட 15 பேர் கொண்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர் அதனைத் தொடர்ந்து சுமார் 32 பேருக்கு சமன் அனுப்பி நெல்லை சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்றது அதே போல் அவருடைய மனைவி மற்றும் மகன்களை சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து விசாரணை செய்யப்பட்டது.
அதேபோல் இன்று காலை சிபிசிஐடி போலீசார் மற்றும் 50ற்கு மேற்பட்ட தடவியல் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ஜெயக்குமார் தோட்டம் மற்றும் அவரது வீடு பகுதிகளில் ஏதேனும் தடயங்கள் சிக்குமா என்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.