மதுரை, செல்லூர் பகுதியில் வல்லபாய் சாலை நாம் தமிழர் கட்சியின் வடக்கு தொகுதி துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். நா.த.க. நிர்வாகி பாலசுப்பிரமணியன் கொலை தொடர்பாக மதுரை தல்லாகுளம் போலீசார் விசாரணை .
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பதற்றத்தையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக முன் விரோதம், பழிவாங்கல், அரசியல் கொலைகளால் காவல்துறையினரையே திணற வைத்துள்ளது. இதனால், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக எங்கு பார்த்தாலும் போதைப் பொருட்கள் விற்பனை அதிகமாக உள்ளது எனவும், குறிப்பாக கொலை,கொள்ளை,திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை நடந்த வண்ணமே உள்ளது.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவரை ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் நாம் தமிழர் கட்சி நிர்வாகியாக இருக்கிறார். மேலும் மதுரை வடக்கு தொகுதி துணை செயலாளராகவும் அவர் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் வல்லபாய் சாலையில் பாலசுப்ரமணியன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரை சூழ்ந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சிறிது நேரத்தில் துடிதுடித்து உயிர் இழந்தார். அதிகாலையில் நடைபெற்ற கொலை சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதை அடுத்து அங்கு வந்த தல்லாகுளம் காவல்துறையினர் பாலசுப்ரமணியனின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
மேலும் பாலசுப்பிரமணியன் அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.