வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிய சைக்கோ குற்றவாளியை ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபர் குடியாத்தம் அடுத்த பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்த ஹேமராஜ் (30) என்பதும் இவர் அடிக்கடி ரயில்களில் குற்ற செயல்களில் ஈடுபடும் பதிவேடு பட்டியலில் உள்ளவர் என தெரியவந்துள்ளது.
ரயிலில் தனியாக செல்லும் பெண்களை குறி வைத்து பாலியல் தொல்லை கொடுத்து வழிப்பறி கொலை என தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட சைக்கோ கில்லர் சிக்கியது எப்படி? ஜாமினில் வெளிவந்து மீண்டும் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலம். ஆந்திரா மாநிலம் சித்தூரைச் சேர்நத் 4- மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் டெய்லராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், நேற்று (பிப்-6) தனது சொந்த ஊரான சித்தூருக்கு செல்வதற்கு கோயம்புத்தூர் to திருப்பதி செல்லும் இன்சிர் சிட்டி விரைவு ரயிலில் பயணம் செய்தபோது கர்ப்பிணி பெண் ரயில் கழிவறைக்கு சென்றபோது அங்கு ஒருவர் தொடர் பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் கர்ப்பிணி பெண் கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த அந்த நபர் 4-மாத கர்ப்பிணி பெண்ணை வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் அருகே ரயில் வந்து கொண்டிருந்தபோது ரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டுவிட்டு ரயில் காட்பாடி நிலையம் வந்ததும் அந்த நபர் இறங்கிச் சென்றுள்ளார்.
ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டதில், கர்ப்பிணிக்கு கை கால் முறிவு ஏற்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுருக்கிறது. இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் கர்ப்பிணியை மீட்ட ரயில்வே காவல்துறையினர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில்,
படுகாயமடைந்த கர்ப்பிணி பெண்ணிடம் ரயில்களில் குற்றங்களை செய்யும் பதிவேடு குற்றவாளிகளின் புகைப்படங்களை காண்பித்து ரயில்வே போலீசார் விசாரித்த போது கர்ப்பிணிப் பெண் ஹேமராஜின் புகைப் படத்தை அடையாளம் கண்டு கூறி இருக்கிறார். இதனை அடுத்து ஹேமராஜை குடியாத்தம் அருகே ரயில்வே போலிசார் கைது செய்து இருக்கிறார்கள்.
ஏற்கனவே 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஹேமராஜ் மீது சென்னையை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த பெண்ணை ரயிலில் வரவழைத்து குடியாத்தம் ரயில் நிலையம் அருகே உள்ள மலை பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்த வழக்கும், 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் இருந்து திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்த பெண்ணை காட்பாடி ரயில் நிலையம் அருகே செல்போனை பறித்துக் கொண்டு ரயிலில் இருந்து இளம் பெண்ணை தள்ளிவிட்ட வழக்கும் இவன் மீது நிலுவையில் உள்ளது.