டீக்கடை உரிமையாளரிடம் ரூ.3.44 இலட்சம் பறித்த கும்பல்
நாமக்கல் அடுத்த பொய்யேரிக் கரை பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக டீ கடை நடத்தி வருபவர் செல்லதுரை (52). கடந்த மாதம் 26 ஆம் தேதியன்று இவரது டீக்கடைக்கு வந்த மூன்று பேர் தாங்கள் சென்னையில் இருந்து வந்த Special Crime Branch-ஐ சேர்ந்த காவல் துறையினர். உன் மீது கிரிமனல் வழக்கு பதியப்பட்டுள்ளதால் சென்னைக்கு அழைத்து சென்று விசாரிக்க வேண்டுமென கூறியுள்ளனர்.
மேலும் உன் வீட்டை சோதனை செய்ய வேண்டுமென செல்லதுரையிடம் கூறிய அந்த மூன்று பேர் வீட்டின் பீரோவில் இருந்த ரூ.34 ஆயிரம் ரொக்கப் பணத்தை எடுத்துள்ளனர். தொடர்ந்து செல்லதுரையின் கைபேசியை வாங்கி, வங்கி கணக்கை பார்த்த போது pay.tm-ல் 3 லட்சம் 10 ஆயிரம் ரொக்கம் இருந்ததை கண்டுள்ளனர்.
இதை அடுத்து செல்லதுரைக்கு வங்கி கணக்குள்ள பரமத்தி சாலையில் உள்ள தனியார் வங்கிக்கு, அவரை அழைத்து சென்ற அந்த 3 பேர் 1 லட்சம், 2 லட்சம் மற்றும் 10 ஆயிரத்திற்கான காசோலைகளை பெற்றுக் கொண்டு 3 லட்சம் பணத்தை உடனடியாக எடுத்துள்ளனர்.
இதன் பின் இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் உன்னை கைது செய்வதோடு சிறைக்கு அனுப்பி விடுவோம் என கூறி செல்லதுரையை மிரட்டி விட்டு பணத்தை எடுத்து சென்றுள்ளனர். பணத்தை பறி கொடுத்த செல்லதுரையும் பயந்து போய் அவரது மனைவி, மகள் , மகன் என யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் செல்லதுரையின் மகள் நேற்று சென்னையில் இருந்து வந்திருந்தபோது 10 ஆயிரம் அவரது வங்கி கணக்கில் இருந்து எடுத்ததற்கான குறுஞ்செய்தி வந்ததை கண்டு செல்லதுரையிடம் கேட்டுள்ளார். அப்போது தான் நடந்ததை அவரது மகளிடம் செல்லதுரை கூறியுள்ளார். இதன் பின் உடனடியாக நாமக்கல் காவல் நிலையத்திற்கு செல்லதுரையும் அவரது மகளும் புகார் அளித்துள்ளனர்.
10 ஆயிரத்திற்கான காசோலையினை வங்கி அலுவலர்களிடம் கொடுத்து விட்டு பணத்தை வாங்குவதற்காக வங்கியிலேயே காத்துக் கொண்டிருந்தவனை நாமக்கல் போலீசார் சுற்றி வளைத்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர், போலீசார் அவர்களது பாணியில் பிடிப்பட்டவனிடம் மேற்கொண்ட கிடுக்குபிடி விசாரணையில், அவன் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த மாதேஸ்வரன் (33) என்பது தெரியவந்தது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்த சபரிநாதன் (39) மற்றும் சேலத்தை சேர்ந்த இலியாஸ் (38) என்பவர்களுடன் இணைந்து பணம் பறிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டதாக ஒப்புகொண்டுள்ளார்.
பின்னர் போலீசார் கொடுத்த ஆலோசனை பேரில் மாதேஸ்வரனை வைத்து இலியாசையும், சபரிநாதனையும் நேரில் வரவழைத்து பரமத்தி அருகே சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். செல்லதுரை அப்பாவி போல் இருந்ததாலும், அவரின் பயந்த சுபாவத்தை பயன்படுத்தி பணம் பறிக்கும் செயலில் ஈடுப்பட்டதாக மூவரும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதன் பின் மூவரிடம் இருந்த 1 லட்சத்து 65 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்து மூவரையும் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இலியாஸ், சபரிநாதன் மீது பல்வேறு கொள்ளை கொலை வழக்கு உள்ளது. இவர்கள் இருவரும் சேலம் சிறையில் கடந்த 2014 ஆம் ஆண்டு சிறையில் இருந்த போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.