கோவையில் தரணிதரன் என்பவரை கடத்தி அவரிடம் இருந்து வீட்டு பத்திரம், கார் உள்ளிட்டவற்றை பறித்த அனுமன் சேனா நிர்வாகி மற்றும் முன்னாள் பாஜக நிர்வாகிகள் என மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த தரணிதரன் என்பவரின் நிலத்தை ஹரி பிரசாத் என்பவர் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளார். 2.5 கோடி ரூபாய்க்கு நிலத்தை வாங்க பேசப்பட்ட நிலையில், 8 லட்ச ரூபாய் பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு மீதிப் பணத்தை கொடுக்காமல் நிலத்தை கொடுக்க மிரட்டியுள்ளனர்.
தரணிதரனை தாராபுரத்தில் இருந்து கோவை அழைத்து வந்து ரயில் நிலையம் அருகில் உள்ள ஹோட்டலில் தங்க வைத்து அவரிடம் இருந்து வீட்டு பத்திரம், கார், ஏடிஎம் கார்டு உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டதாக புகார் தெரிவித்தார்.
இதனை அடுத்து தரணிதரன் கோவை பந்தயசாலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கூட்டு சதி உட்பட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஹரி பிரசாத், பிரவீன் மற்றும் பாபு ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய செந்தில், ஜான்சன் என்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஹரி பிரசாத் மற்றும் பாபு ஆகியோர் பாஜக முன்னாள் நிர்வாகிகள். பிரவீன் குமார் அனுமன் சேனா அமைப்பின் கோவை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகின்றார்.
கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க இருக்கின்றனர்.