குடித்துவிட்டு தகராறு செய்த கணவரை கொலை செய்த பெண் கைது
ஆண்டிபட்டி மலைக்கிராமத்தில் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தகராறுசெய்த கணவரை மிளகாய் பொடியை கண்ணில்தூவி, அரிவாளால் வெட்டி கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ராயவேலூர் மலைக்கிராம பகுதியைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவருக்கும் அழகுசின்னு என்ற பெண்ணுக்கும் திருமணம் முடிந்து இரண்டு மகன்கள் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக பிரிந்து இருந்தனர்
இந்நிலையில் மீண்டும் சிலமாதங்களாக ஒன்றாக சேர்ந்து இருவரும் வாழ்ந்துவந்த நிலையில், சண்முகவேல் மதுகுடித்துவிட்டு வந்து நாள்தோறும் வீட்டில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல் இரவில் மது குடித்துவிட்டு வந்து அழகு சின்னுவிடம் சண்முகவேல் தகராறு செய்ததோடு இரண்டு மகன்களையும் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் கடும் ஆத்திரமடைந்த அழகுசின்னு கணவனின் இரு கண்களிலும் மிளகாய்பொடியை தூவி அரிவாளால் தலை, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் சராமாரியாக வெட்டினார். இதில் சண்முகவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இத்தகவல் பரவியதையடுத்து சண்முகவேல் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த ராஜதானி போலீசார், மேலும் விசாரணை மேற்கொண்டு கொலைசெய்த அழகுசின்னுவை கைதுசெய்தனர்.