ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறுஉத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை வெளியிட்டு உள்ள அறிவிப்பில், இன்று (25.11.2024) முதல் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின் படி இலங்கை கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதாகவும், இதன் காரணமாக அதிக கனமழை மற்றும் மணிக்கு 35 முதல் 45 கி. மீ வேகத்திலும் இடை இடையே 55 கி. மீ வரை காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் மறுஉத்தரவு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், மேலும் விசைப்படகுகளை ஒன்றுக் கொன்று இடைவெளி விட்டு நங்கூரமிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், நாட்டு படகுகளை பாதுகாப்பாக கரையேற்றி வைக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. இதனிடையே, மீன்வளத்துறை உத்தரவை அடுத்து, ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் 560-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளன.