தனியார் மருத்துவமனைகளில் மட்டும் செயல்படுத்தப்பட்டு வந்த செயற்கை கருத்தரித்தல் மையம் இனி அரசு மருத்துவமனைகளிலும் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது,
இந்தியாவில் 25-45 வயதான பெண்களிடம் கருத்தரிப்பின்மை பாதிப்பு 3.9 சதவீதம் இருப்பதை உலக சுகாதார மையம் உறுதிப்படுத்தியுள்ளது. உடற்பயிற்சி இல்லாதது, உடல் பருமன், உணவு பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவைதான் இதற்கான காரணங்களாக உள்ளன.
இந்த சூழலில், அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் மையம் அமைக்கப்பட்டிருப்பது நிச்சயம் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும். சண்டிகர், டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் ஏற்கெனவே இருந்தாலும், அங்கு ஒரு கருத்தரிப்பு சுழற்சிக்கு ரூ.2.5 லட்சம் வரை செலவாகிறது. ஒரு குழந்தை பிறக்க ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை தேவைப்படுகிறது.
ஆனால், இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலுடன் சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் முழுமையான இலவச செயற்கை கருத்தரித்தல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து கோவை, சேலத்தில் விரைவில் இம்மையங்கள் செயல்பாட்டுக்கு வர உள்ளதாகவும் தெரிவித்தார்.