ஆந்திராவில் தெலுங்குதேசம் கூட்டணி ஆட்சி பொறுப்பேற்ற 120 நாட்களில் பெண்களுக்கு எதிராக 110 தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், குற்றங்களை தடுக்க முடியாவிட்டால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யுங்கள் என்றும் முன்னாள் அமைச்சர் ரோஜா விமர்சித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் யர்ரவாரி பாளையத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவிக்கு மர்மநபர்கள் மயக்க மருத்து கொடுத்து கத்தியால் தாக்கியதில் அவர் காயமடைந்தார். அந்த சிறுமிக்கு திருப்பதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட சிறுமியை நடிகையும், முன்னாள் அமைச்சருமான ரோஜா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அவரிடம் நடந்த விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் ரோஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆந்திர மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்கின்றன. கூட்டணி ஆட்சி பதவியேற்ற 120 நாட்களில் பெண்கள், மைனர் சிறுமிகளை எரித்துக்கொலை செய்வது, தாக்குதல், பாலியல் பலாத்காரம் என 110 சம்பவங்கள் நடந்துள்ளன. பள்ளியிலிருந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து கத்தியால் தாக்கி உள்ளனர். திருப்பதி எஸ்.பி. சுப்பா ராயுடு மேலிடத்தில் இருந்து வரக்கூடிய அரசியல் அழுத்தம் காரணமாக பெற்றோரையும் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை மறைத்து வருகின்றனர்.
இதற்காக திருப்பதி மாவட்டத்தில் சிறுமி தாக்கப்பட்டால் திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வராமல் அன்னம்மையா மாவட்டத்தில் உள்ள பீலேரில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். பலாத்காரத்தை மறைக்க பல மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். உள்துறை அமைச்சர் சரியாக வேலை செய்யவில்லை என்று துணை முதல்வர் பவன் கல்யாண் கூறுகிறார். பட்டியல் இனத்தை சேர்ந்த ஒருவரை டம்மியாக உள்துறை அமைச்சராக வைத்து, மாநிலத்தில் நடக்கும் பிரச்சனைகளை அவர் மீது சுமத்தி வருகின்றனர். மாநிலத்தில் டிஜிபி முதல் எஸ்.ஐ. வரை சந்திரபாபு நாயுடு, அவரது மகன் லோகேஷ் பட்டியல் தயாரித்து நியமித்து வருகின்றனர். லோகேஷ்க்கு பிடிக்காதவர்கள் மீது ரெட்புக் என வைத்து பழிவாங்கி வருகின்றனர்.
பவன் கல்யாண், உத்தரபிரதேச முதல்வர் போல் பணியாற்ற வேண்டும் என்று கூறுகிறார். அவ்வாறு வேண்டுமென்றால் சந்திரபாபுவிடம், யோகி ஆதித்யநாத் போல் வேலை செய்ய என்று பவன் கல்யாண் சொல்ல வேண்டும். ஆட்சியில் இருப்பவர்கள் எந்த தவறும் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உங்களால் முடியா விட்டால் ராஜினாமா செய்யுங்கள். மோடியை தேடிச்சென்று நீங்கள் கூட்டணி ஆட்சியில் இருக்கிறீர்கள். ஆந்திராவில் நடக்கும் கொடுமைகளைப் பார்த்து, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.
இந்துபுரத்தில் மாமியார், மருமகள் மீது கூட்டு பலாத்காரம் நடந்தபோது, அந்த ஊர் எம்.எல்.ஏ பாலகிருஷ்ணா படப்பிடிப்பில் உள்ளார். வாக்கு இயந்திரத்தை வைத்து சமாளித்து வெற்றி பெற்றால் இதுபோன்ற நிர்வாகமே இருக்கும். ஒரு டம்மி உள்துறை அமைச்சரை வைத்தால், பெண்களின் நிலை இப்படி தான் இருக்கும். ஜெகன் மோகன் திருப்பதிக்கு வருகிறார் என்ற தகவலால் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி வருகின்றனர், இவ்வாறு அவர் தெரிவித்தார்.