15 ஆண்டுகளுக்கு பிறகு அதுபோன்ற திருமணம் இப்போது தான் நடந்துள்ளது
கேரளாவில் ஏராளமான யூத ஆலயங்கள் உள்ளன. மேலும் இங்கு யூத மதத்தைச் சேர்ந்தவர்களும் வசித்து வந்தனர். தற்போது இந்த யூத ஆலயங்கள் அனைத்தும் காட்சிகூடங்களாக மாறிவிட்டன. இதனால் இங்கு கல்யாணம் போன்ற சடங்குகள் இப்போது நடப்பதில்லை.

இந்த நிலையில் கொச்சியை சேர்ந்த முன்னாள் காவல் அதிகாரியின் மகள் மஞ்சுஷா மரியம் இம்மானுவேலுக்கும், அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி ரிச்சர்ட்டு ரோவுக்கும் கல்யாணம் நிச்சயிக்கப்பட்டது.
மணமக்களின் பெற்றோர் இந்த திருமணத்தை யூத மத முறைப்படி நடத்த முடிவு செய்தனர். தற்போது யூத ஆலயங்களில் இந்த கல்யாணம் நடப்பதில்லை என்பதால் கொச்சியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் யூத ஆலயம் போன்ற கூடாரம் அமைக்கப்பட்டது.
அந்த கூடாரத்தில் யூத மத முறைப்படி இந்தக் கல்யாணம் நடைபெற்றது. இஸ்ரேலை சேர்ந்த மதகுரு இதனை நடத்தி கொடுக்க வந்திருந்தார். மதகுரு முன்னிலையில் முதலில் மணமக்கள் மோதிரம் மாற்றி திருமண ஒப்பந்தம் செய்துக் கொண்டனர். அடுத்து கெதுபா படித்து கண்ணாடியை உடைத்து திருமண பந்தத்தில் இணைந்தனர்.

இறுதியில் ஹீப்ரு பாடல்கள் பாடியும், நடனமாடியும் இந்த விழா நடந்தது. இதில் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதுபற்றி விருந்துக்கு வந்தவர்கள் சொல்லியதாவது, கடந்த வருடம் 2008-ல் இங்கு யூத முறைப்படி திருமணம் நடந்தது. அதன்பின்பு பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் அதுபோன்ற திருமணம் நடந்துள்ளது என்றனர்.