மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கச்சத்தீவு விவகாரம்- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். கைதுச் செய்யப்பட்ட முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை நீதிமன்றத்தின் அனுமதியுடன் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை நடத்தியது.
அதைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை காவல் நிறைவடைந்த நிலையில், பலத்த பாதுகாப்புடன் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவலை நீட்டிக்க தேவையில்லை” என்றார்.
இதையடுத்து, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை வரும் ஏப்ரல் 15- ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, அரவிந்த் கெஜ்ரிவால், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட போதிலும், முதலமைச்சர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.