அரியானா, ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு 10 ஆண்டுகளுக்கு பின்னர் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேபோல், 90 தொகுதிகளைக் கொண்ட அரியானா சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இரு மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் வருகின்ற 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த நிலையில், ஜம்மு – காஷ்மீர் மற்றும் அரியானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. இரு மாநிலங்களிலும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் சற்று முன்பு வெளியானது. அதன்படி, ஜம்மு – காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 50 இடங்களுக்கு மேல் காங்கிரஸ் – தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி கைப்பற்றுகிறது. இக்கூட்டணி 49 முதல் 61 இடங்கள் வரை கைப்பற்றும் என தெரிவிக்கபபட்டுள்ளது. பாஜக 20 முதல் 32 இடங்களையும், பிடிபி 7 முதல் 11 இடங்கள் வரை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் அரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மையுடன் 55 முதல் 62 இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றுகிறது. ஆளும் பாஜக 18 முதல் 24 இடங்களை மட்டுமே பிடிக்கும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், ஜனநாயக ஜனதா கட்சி 3 இடங்கள் வரை வெல்லும் என்றும் தெரியவந்துள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின்படி அரியானாவில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜகவிடமிருந்து காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றுகிறது