நாட்டில் வளர்ந்து வரும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை மேலும் உயர்த்துவதற்காக நடுத்தர வர்க்கத்தினரின் செலவினங்களை மேம்படுத்த அரசாங்கம் திட்டமிடுகிறது.
தனிநபர் வருமான வரி விகிதங்களில் மாற்றங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
நடுத்தர வர்க்கத்தினருக்கு உதவும் வகையில் வருமான வரி அடுக்குகளில் அரசாங்கத்திடமிருந்து சில பெரிய நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை மத்தியில் இந்த மாற்றங்கள் அமலுக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பழைய வருமான வரி (Old tax regime) மற்றும் புதிய வருமான வரி (New tax regime) இடையில் மாறுவதற்கு தனி நபர்களுக்கு உரிமை உள்ளது. அதே சமயம் ஒரு நபர் இரண்டிற்கும் இடையே எத்தனை முறை மாறலாம் என்பதற்கு வருமான வரித்துறை கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. அவர்களின் வருமான வகை ஸ்லாப்பை பொறுத்தே இரண்டிற்கும் இடையில் மாறுவதற்கு அனுமதி அளிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.
மானியங்கள் மற்றும் பிற திட்டங்களுக்கான செலவினங்களை அதிகரிப்பதற்குப் பதிலாக, தனிநபர் வருமான வரி விகிதங்களைக் குறைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் இருக்கலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுவதாக அறிவித்த நிலையில் ,புதிய வரி விதிப்பின்படி விலக்கு வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்படலாம் என தகவல்கள் வருகின்றன.
வருமான வரியின் புதிய முறையில் குறைந்தபட்ச வரி வரம்பை ரூ. 5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 5% வரி விதிக்கப்படுகிறது. இதனை ரூ.5 லட்சமாக உயர்த்துவதன் மூலம் புதிய முறையில் வரி செலுத்துவோரின் வரி குறையும். ஆனால், பழைய முறை வரி விதிப்பில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று தகவல் வெளியாகியிருக்கிறது.