கெஜ்ரிவால் டெல்லி நீதிமன்றத்தில் ஜாமீன் மனு
சரணடைய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். அவசர வழக்காக இன்றே விசாரணைக்கு எடுக்க பரிந்துரைப்பதாக நீதிபதிகள் உறுதியளித்துள்ளார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெத்ரிவால் கடந்த மார்ச் 23 ஆம் தேதி மதுபான கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 50 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த மே மாதம் 10 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட இடைக்கால நிபந்தனை ஜாமினை வழங்கியது.
ஜூன் 1 ஆம் தேதி வரை நிபந்தனை ஜாமீன் வழங்குவதாகவும் ஜூன் 2 ஆம் தேதி அன்று டெல்லி திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைய வேண்டும் என்றும் ஜாமீன் வழங்கிய நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தன்னுடைய உடல்நிலை 7 கிலோ குறைந்துள்ளதாகவும் இது மோசமான நோய்களுக்கான அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ள நிலையில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள தனக்கு கூடுதலாக 7 நாட்கள் ஜாமின் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தை அரவிந்த் கெஜ்ரிவால் நாடி இருந்தார்.
ஆனால் உச்ச நீதிமன்றத்தின் கோடைகால விடுமுறை அமர்வும், அதனை தொடர்ந்து உச்சநீதிமன்ற பதிவாளரும் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்தது. அதே நேரத்தில் விசாரணை நீதிமன்றத்தை நாடி ஜாமீன் பெற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தல் வழங்கியிருந்தனர்.
அதன் அடிப்படையில் இன்று டெல்லி ரோஸ் அவென்யூ விசாரணை நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கமான ஜாமீன் கோரி மனுவை தாக்கல் செய்துள்ளார். மேலும் சிறையில் சரணடைய இன்னும் இரண்டு நாட்களில் உள்ளதால் வழக்கை நலன் கருதி அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்படி முறையீடு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று பிற்பகல் 2 மணிக்கு மேல் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள பரிசீலிப்பதாக ரோஸ் அவென்யூ நீதிமன்ற நீதிபதிகள் உறுதி அளித்துள்ளனர்.