டெல்லியில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகிய இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
டெல்லியில் இன்று அதிகாலை 5.36 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4 ஆக பதிவாகியதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரித்துள்ளது. புதுடெல்லியில் இருந்து கிழக்கு திசையில் சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் சுமார் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால், டெல்லியில் வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் குலுங்கின. இதனால் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். எனினும் இந்த நிலநடுக்கத்தால் எந்தவிதமான உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்படவில்லை. இதனிடையே, குரேகான் பகுதிகளிலும், வடமாநிலங்களில் பல்வேறு பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.