Homeசெய்திகள்இந்தியாமக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா?

மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா?

-

Parliament

மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லாவையே மீண்டும் தேர்வு செய்ய பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

18வது நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்து பிரதமர் மோடி 3வது முறையாக ஆட்சியமைத்துள்ளார். ஆனால் கடந்த முறை போல் அல்லாமல், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறார். அதேபோல் 234 இடங்களை கைப்பற்றி பலமான எதிர்க்கட்சியாக இந்தியா கூட்டணி அமைந்துள்ளது. இந்த நிலையில் 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று (ஜூன் 24) தொடங்கியது. ஜூலை 3ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று, இடைக்கால சபாநாயகராக பாஜகவின் பர்த்ருஹரி மஹதாப் தேர்வு செய்யப்பட்டு, அவர் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்களுக்கு பதவிப்பிரமானம் செய்து வைத்தார்.

துணை சபாநாயகர் பதவியை காங்கிரஸ் கட்சி கோரிய நிலையில்,அது நிராகரிக்கப்பட்டுவிட்டது. 234 உறுப்பினர்களை வைத்துள்ள தங்களுக்கு துணை சபாநாயகர் பதவி அளிக்கவில்லையேல், சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவோம் என்றும், வேட்பாளர் ஒருவரை நிறுத்துவோம் என்றும் இந்தியா கூட்டணி அறிவித்துள்ளது. இந்த நிலையில் முன்னாள் சபாநாயகர் ஓம் பிர்லாவையே மீண்டும் தேர்வு செய்ய பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, மேலும் இது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே இடைக்கால சபாநாயகருக்கு உதவ 5 பேர் கொண்ட உறுப்பினர்கள் குழுவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமித்தார். 8 முறை எம்பியாக பதவிவகித்த சுரேஷ்க்கு இடைக்கால சபாநாயகர் பதவியை வழங்காமல் பர்த்ருஹரிக்கு வழங்கியதற்கும், துணை சபாநாயகர் பதவியை இந்தியா கூட்டணிக்கு வழங்க மறுத்ததற்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆகையால் துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க வாய்ப்பிருப்பதாகவும், இதுகுறித்து திமுக எம்.பி., டி.ஆர். பாலுவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது முடிவை தெரிவிப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று சபாநாயகர் பதவிக்கு போட்டியிட முன்னாள் சபாநாயகர் ஓம் பிர்லா வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

MUST READ