குன்னூர் பேருந்து விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம்- பிரதமர் மோடி
நீலகிரியில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-ம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன். கடையம் கூட்டுறவு கடன் சங்கத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர், அப்பகுதியில் உள்ளவர்களை சுற்றுலா அழைத்துச் செல்வது வழக்கம். தற்போது காலாண்டு தேர்வு விடுமுறை என்பதால் கடையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 54 பேரை சுரண்டையைச் சேர்ந்த தனியார் பேருந்தில் சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்றுள்ளார். வியாழக்கிழமை இரவு கேரளத்திற்கு சென்று அங்கிருந்து ஊட்டி சென்றுள்ளனர். ஊட்டியில் சுற்றி பார்த்துவிட்டு ஊர் திரும்பும் போது குன்னூர் அருகே பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடையம் பகுதியைச் சேர்ந்த எட்டு பேர் உயிரிழந்தனர்.
விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பேருந்து விபத்துக்குள்ளானதில் உயிர் இழந்தது வேதனை அளிக்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உதவித் தொகையாக இறந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் பிரதமர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்” என்றார்.