மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக பா.ஜ.க நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.
கடந்த 2018-ம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட பெங்களூரு வந்த ராகுல் காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக ஆட்சேபத்திற்குரிய கருத்துகளை தெரிவித்தார். இதனை எதிர்த்து பா.ஜ.,வைச் சேர்ந்த விஜய் மிஸ்ரா என்பவர் ராகுல் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை சுல்தான்பூரில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த பிப்.,20ம் தேதி இந்த வழக்கில் ராகுல் ஆஜராகி இருந்தார். மீண்டும் ஆஜராக உத்தரவிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ராகுல் இன்று மீண்டும் ஆஜரானார். இந்த விசாரணைக்கு பிறகு வழக்கானது ஆக.,12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.