ஆவிகளுக்கு திருமணம் செய்து ஆத்மாவை சாந்தப்படுத்தும் வினோதம்
கர்நாடகாவில் 30 ஆண்டுகளுக்கு முன்னால் இறந்த பெண்ணுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னால் இறந்த மணமகன் தேவை என பத்திரிக்கையில் வெளியான விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆவிகளுக்கு திருமணமா என பலரும் உறைந்து நிற்க சிலர் ஆவிகளின் திருமணத்திற்கு ஆர்வம் காட்டியுள்ளது வியப்பு ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சனா 2 திரைப்படத்தில் வரும் வசனத்தையே மிஞ்சும் வகையில் கர்நாடக மாநிலத்தில் ஒரு வினோத வழக்கம் உள்ளதாம். அது தான் ஆவிகளுக்கு திருமணம் செய்து வைத்து ஆத்மாக்களை சாந்தப்படுத்தும் குலே மடிமே எனப்படும் வித்தியாசமான சடங்கு.
கர்நாடக கடலோர மாவட்டங்களில் வசிக்கும் துளுவா இன மக்களின் இந்த வழக்கம் அண்மையில் நாளிதழில் வெளியிடப்பட்ட விளம்பரம் மூலம் விவாத பொருளாகியுள்ளது.
திருமணத்துக்கு வரன் தேடி வெளியிடப்படும் விளம்பரங்களை போல் கர்நாடக மாநிலம் புத்தூர் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தின் சார்பிலும் மணமகன் தேவை என்று விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.
இது வழக்கமானது தானே என்று கடந்து செல்ல முடியாததற்கு காரணம் 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன தங்கள் பெண் குழந்தைக்கு அதேபோல 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன மணமகன் தேவை என்று விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டது தான்.
அதுவும் சொந்த ஜாதியில் குறிப்பிட்ட கோத்திரத்தில் பிறந்து 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சிறுவனின் பெற்றோர் விரும்பினால் தொடர்பு கொள்ளலாம் என்றும் விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ள இது போன்ற விளம்பரங்களை ஒரு தனி குடும்பம் மட்டுமே கொடுப்பதில்லை என்கிறார்கள் கர்நாடக சமூக ஆர்வலர்கள்.
தக்ஷணா கனடா மற்றும் உடுப்பி கடலோரப் பகுதிகளில் இறந்தவர்களின் ஆவிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் குலே மடிமே என்ற சம்பிரதாயம் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர்கள் கூறுகிறார்கள்.
திருமணம் ஆகாமல் இறந்து போனவர்களின் ஆசைகளை நிறைவேற்றி வைக்கும் வகையில் இந்த சம்பிரதாயம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வழக்கப்படிதான் புத்தூர் பகுதியை சேர்ந்த குடும்பமும் ஒரு தொலைபேசி எண்ணுடன் இந்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.
உள்ளூர் பத்திரிகையில் வெளியிடப்பட்ட இந்த விளம்பரத்தை ஒருவர் சமூக வலைதளத்தில் பகிர தங்களது நடவடிக்கை கேலி கிண்டலுக்கு உள்ளாகும் என்றே குடும்பத்தினர் கருதியுள்ளனர்.
https://www.apcnewstamil.com/news/politics/modi-canvasses-votes-with-khichdi-and-chapati-rolls/84305
ஆனால் நினைத்ததற்கு நேர் மாறாக சுமார் 50 பேர் இறந்த பெண் உடனான திருமணத்திற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் விரைவில் ஆவிகளுக்கு இடையேயான திருமண தேதியை முடிவு செய்ய உள்ளதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
விஞ்ஞானம் எவ்வளவு வேகமாக முன்னேறிச் சென்றாலும் அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் மூடநம்பிக்கைகளை பின்பற்றுபவர்களும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதற்கு இந்த விளம்பரமே சாட்சியாகியுள்ளது.