மத்திய அரசின் பட்ஜெட் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக சென்னை பாரிமுனை பி.எஸ்.என்.எல் அருகே போராட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை தேசிய செயலாளர் டி.ராஜா தொடங்கி வைத்தார். அப்போது மத்திய அரசின் பட்ஜெட் நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் டி.ராஜா பேசியதாவது – மத்திய பட்ஜெட் ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்களை ஏமாற்றும் நிலையில் இருப்பதாகவும், இந்தியாவில் வேலை வாய்ப்பு பெரும் பிரச்னையாக இருக்கிறது. அதேபோல் விலைவாசி உயர்வு பெரும் நெருக்கடியையும் ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்தார்.
இந்திய நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்ற வகையில் பட்ஜெட் இல்லாததால் அதனை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார். விவசாயிகளின் நலனில் அக்கறை இல்லாத பட்ஜெட் என விமர்சித்தார்.
பா.ஜ.க வை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற கொள்கையில் செயல்படும் நிலையில் மதச்சார்பற்ற சக்திகள் இன்னும் ஒன்றிணைய வேண்டிய அவசியம் இருப்பதாக தெரிவித்தார். டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகளை பார்த்து இந்தியா கூட்டணி சுய பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக கூறியுள்ளாா்.
டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்து தற்போது முழுமையாக பேச முடியாது என்றும், தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் இந்தியா கூட்டணி இன்னும் வலிமையாக பல பிரச்னையில் போராட வேண்டியது அவசியம் என்றார். இந்தியாவில் மதச்சார்பற்ற சக்திகள் இன்னும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
பெரியார் மண்ணில் மண்டியிட்ட சீமான் கட்சி… டெபாசிட்டை இழக்கும் நாதக வேட்பாளர்..?