அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி கடந்த 2015 ம் ஆண்டில் பாய் வியாபாரியிடம் 65 லட்சம் மோசடி செய்த அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது மகள் மீது சேலத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சேலம் அஸ்தம்பட்டி ஜான்சன் பேட்டை கிழக்கு தெருவை சேர்ந்தவர் முனுசாமி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மாநகர காவல் ஆணையரிடம் ஒரு புகார் மனு அளித்திருந்தார். அதில் தான் கோரைப்பாய் நெய்து வியாபாரம் செய்து வந்தேன். என்னுடைய தொழில் மூலம் பல இடங்களுக்கு மொத்தமாகவும், சிலரையாகவும் பாய் விற்பனை செய்து வந்தேன். மேலும் அரசுத் துறைகளுக்கும், தனியார் தொண்டு நிறுவனங்களுக்கும் கோரைப்பாய்களை மொத்த விலையில் விற்பனை செய்து வந்தேன். கடந்த 2013 ம் ஆண்டில் சேலம் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையில் ஆசிரியராக பணியாற்றி வந்த வெங்கடேசன் என்பவர் அறிமுகமானார். கடந்த 2013 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த என்.சுப்பிரமணியிடம் என்னை அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் சேலம் மாவட்டம் பெரிய கிருஷ்ணபுரம் உண்டு உறைவிட பள்ளி விடுதிக்கு 300 பாயும், கருமந்துறை வெள்ளிமலை உண்டு உறைவிட பள்ளிக்கு 400 பாயும் கொடுக்குமாறு அவர் கூறினார். அதன்படி நான் இரு பள்ளிகளுக்கும் மொத்தம் 700 கோரைப்பாய்களை கொடுத்து அதற்கான தொகை 90 ஆயிரம் பெற்றுக் கொண்டேன். மேலும் தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிடர் விடுதிகளுக்கு எனக்கு ஒப்பந்தம் வாங்கி கொடுப்பதாக அமைச்சர் கூறியதால், நான் அடிக்கடி அமைச்சரை சந்திக்கும் சூழல் வந்தது. அப்போது சேலம் ஆதிதிராவிட நலத்துறைக்கு சமையல் பணிக்காக 80 பேரை எடுப்பதாகவும் , அதில் 20 பேருக்கு சேலம் மாவட்டத்தில் பணி ஆணை வழங்க உள்ளதாகவும், இதற்கு எந்த ஒரு நேர்முகத் தேர்வும் கிடையாது என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும் தலா மூன்று லட்சம் ரூபாய் யார் தருகிறார்களோ, அவர்களுக்கு தான் சமையல் பணி வழங்குவேன். எனவே உங்களுக்கு தெரிந்தவர்களிடம் கூறுங்கள் என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். நான் எனக்குத் தெரிந்த நண்பர்கள் உறவினர்கள் ஆகியோரிடம் கூறினேன். அமைச்சரின் வார்த்தையை நம்பி நானும் எனது உறவினர்களும் 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி முதல் கட்டமாக 15 லட்சத்தை இலுப்பூரில் உள்ள அவரது வீட்டில் வைத்து கொடுத்தோம். அதன் பிறகு அமைச்சர் மீதி தொகையை செலுத்தினால் தான் பணி ஆணை வழங்க முடியும். அதனால் பணத்தை உடனடியாக செலுத்துமாறு எங்களை தொந்தரவு செய்தார் .
நாங்கள் பல இடங்களில் கடன் பெற்று 2015 ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி சேலத்தில் வைத்து 20 லட்சத்தை இரண்டாவது தவணையாக கொடுத்தோம். அதன் பின்னர் மூன்று மற்றும் நான்காம் தவணயாக தலா 15 லட்சம் என 30 லட்சம் ரூபாய் கொடுத்தோம். இந்த வகையில் மொத்தம் 65 லட்சம் பணத்தை முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியிடம் கொடுத்துள்ளோம்.
இந்த 65 லட்சம் ரூபாயை , தன் மகள் லாவண்யாவிடம் சுப்பிரமணியன் கொடுத்துவிட்டார். பணத்தை வாங்கிக்கொண்டு பல மாதங்கள் ஆகியும் வேலை வாங்கி கொடுக்காமல் காலதாமதத்தை ஏற்படுத்தி எங்களை பல இடங்களுக்கு அலைய வைத்தனர். இதனிடையே 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சுப்பரமணியனுக்கு எம்எல்ஏ சீட் கிடைக்காத காரணத்தினால் , எங்களுக்கு வேலை வாங்கி தரவில்லை. இதனால் சுப்பரமணியனை பார்ப்பதற்காக நானும் எனது உறவினர்களும் பல மாதங்கள் தேடிப் பார்த்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதற்கு இடையில் சென்னை வேளச்சேரியில் சுப்பிரமணியன் அவரது மகன், மகள், மனைவி ஆகிய நான்கு பேரிடமும் பணத்தை கேட்டதற்கு, சொந்த ஊருக்கு வாருங்கள் என்று தெரிவித்தனர். தொடர்ந்து அவரை பார்த்து வந்ததில் 23 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை கொடுத்தனர். மீதி தொகை 41 லட்சத்து 50 ஆயிரத்தை தராமல் எங்களை ஏமாற்றியதோடு, அடியார்களை வைத்து அடித்து மிரட்டி அச்சுறுத்தினர். மேலும் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் அவரது மகள் லாவண்யா, மகன் மற்றும் அடியாட்கள் மீது நடவடிக்கை எடுத்து, நாங்கள் கொடுத்த பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மாநகர காவல் ஆணையரிடம் புகார் கொடுத்தார். இந்த மனுமீது விசாரித்து நடவடிக்கை எடுக்க சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து சேலம் மத்திய குற்றப் பிரிவு போலீசார் , முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் அவரது மகள் லாவண்யா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே அந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பரிந்துரை செய்தார். இதை பரிசீலித்த சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் , இந்த வழக்கை சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்க உத்தரவிட்டார். இதையடுத்து சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி கிருஷ்ணராஜன் , சமையல் வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை வாங்கி மோசடி செய்த புதுக்கோட்டை மாவட்டம் விராலி மலையைச் சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் அவரது மகள் லாவண்யா ஆகியோர் மீது மோசடி உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்…