பாஜகவுக்காக அதிமுக தவம் இருக்கும் சூழல் உருவாகி உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுகையில், ”பாஜகவால் தோற்றோம் என்று கூறியவர்கள் எங்களுக்காக காத்திருக்கின்றனர். பாஜகவுடன் கூட்டணி கிடையாது என கூறியவர்கள் எங்களுக்காக காத்திருக்கிறார்கள். இக்கட்டான சூழலில் வந்த டி.டி.வி. தினகரனை இப்போது எப்படி கழற்றிவிட முடியும்? தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள டி.டி.வி.தினகரனுக்கு பாஜக நன்றியுடன் இருக்கும். பழனிசாமியை முதலமைச்சராக ஏற்போருடன்தான் கூட்டணி என கருத்து கூறியிருந்தார் ஆர்.பி.உதயகுமார். 2021 தேர்தலுக்கு பின் பாஜகவை நோட்டா கட்சி என விமர்சித்தது யார்? என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி பலமாகி கொண்டு இருக்கிறது. பாஜக தீண்டத்தகாத கட்சி என்ற தொனியில் அதிமுகவினர் விமர்சித்ததையும் குறிப்பிட்டு அண்ணாமலை ஆவேசமாக கூறினார். அதிமுக எங்களுக்கு எதிரி கட்சி அல்ல என இரு தினங்களுக்கு முன் கூறியிருந்த நிலையில் அண்ணாமலை திடீர் விமர்சனம் செய்துள்ளார்.