பாஜக-அதிமுக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகி விட்ட நிலையில், ‘அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தால் நான் தலைவர் பதவியில் இருந்து விலகி விடுவேன்” என ஏற்கெனவே அண்ணாமலை கூறி இருந்தார். எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து வந்த பிறகு டெல்லி சென்றார் அண்ணாமலை.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, எடப்பாடி பழனிச்சாமி, அமித்சாவை சென்று சந்தித்து வந்த பிறகு முன்னாடி இருந்த உங்களது அதிமுகவுடனான மோதல் போக்கு எப்படி இருக்கும் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, ”மோதல் போக்கு இல்லை. நான் எதற்கு செருப்பு இல்லாம் ரோட்டில் உங்களிடம் பேசிக் கொண்டிருக்க வேண்டும்? என் கட்சியை வளர்க்க வேண்டும் என்று நான் இருக்கிறேன். என் தொண்டன் செத்துப் போய் 50 வருடமாக 60 வருடமாக பாஜக வளரும் என்று வளருமா வளராதா என்று என் தொண்டன் நின்று கொண்டிருக்கிறான்.
அதற்கு பொறுப்பு ஏற்பது நான்தான். என்னுடைய செயல்பாடுகள் எல்லாமே எனது கட்சி வலிமைப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இருக்கிறேன். அதே நேரத்தில் 2026 தேர்தலைப் பற்றி நான் ஒரு வார்த்தையை பயன்படுத்தினேன். தமிழக மக்களுடைய நலன், சில நேரத்தில் கட்சியை விட முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. என்னை பொறுத்தவரை எந்த பொறுப்பிலும் வேலை செய்வதற்கு நான் தயார். தொண்டனாக வேலை செய்வதற்கும் தயார். என்னால் யாருக்கும் எப்போதும் பிரச்சினை வராது. கட்சி தலைமை அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் அண்ணாமலை ஏற்றுக் கொள்வாரா? ஏற்றுக் கொள்ள மாட்டாரா? என்கிற பிரச்சினையே இல்லை.
என்னுடைய வேலை என்னவோ அதை நான் தொண்டனாகக்கூட செய்வேன். தலைவர் என்கிற பதவி இருந்தால் தான் வேலை செய்வேன் என்கிற அவசியம் கிடையாது. ஆகையால் எந்த கருத்துக்களாக இருந்தாலும், நாங்கள் எங்களுடைய தலைவரிடம் சொல்லி இருக்கிறோம். தமிழக மக்களின் நலன் முக்கியமானது, முதன்மையானது. அதற்காக அண்ணாமலையை பொருத்தவரை எதை வேண்டுமானாலும் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.