நாட்டின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிக்க தேர்வுக் குழு இன்று கூடியது. பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ”தலைமைத் தேர்தல் ஆணையர் நியமன வழக்கை உச்ச நீதிமன்றம் தொடர்ந்து விசாரித்து வருகிறது.
இச்சூழ்நிலையில், புதிய நியமனம் தொடர்பான முடிவை சில நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும். இதில் ஈகோவாக இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. இது ஜனநாயகம், குடியரசின் கோரிக்கை” என்று ராகுல் காந்தி முட்டுக்கட்டை போட்டதாக கூறப்படுகிறது. ஆனால்,இன்றைய கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்ற ராகுலின் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர்.
கூட்டத்திற்குப் பிறகு காங்கிரஸ் செய்தியாளர் சந்திப்பை நடத்தியது. அப்போது காங்கிரஸ் எம்.பி., மனு சிங்வி பேசுகையில், தலைமை தேர்தல் ஆணையர் தேர்வுக்கு பிரதமர்-உள்துறை அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் நியமிக்கப்படுவார்கள். மார்ச் 2, 2023 அன்று உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. தலைமைத் தேர்தல் ஆணையம், தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுப்பதில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், தலைமை நீதிபதி ஆகியோரும் ஈடுபடுவது முக்கியம் என்று கூறியது. தலைமை தேர்தல் ஆணையரை நிர்வாகிகள் மட்டுமே தேர்ந்தெடுக்கக்கூடாது.
இந்த அரசு தலைமை தேர்தல் ஆணையர் தேர்வு செயல்முறையில் இருந்து நீதித்துறையை, தலைமை நீதிபதியை நீக்கியது. இது சவால் செய்யப்பட்டுள்ளது. இன்றைய காங்கிரசின் நிலைப்பாடு என்னவென்றால், நீங்கள் அகங்காரத்துடன் வேலை செய்யக்கூடாது. இன்றைய கூட்டத்தை ஒத்திவைத்து, இது தொடர்பான வழக்கை விரைவில் விசாரிக்க உச்ச நீதிமன்றத்தை கேட்டுக்கொள்வதே எங்கள் கோரிக்கையாக இருந்தது.
இன்று நீங்கள் ஒருவரை நியமித்து, பின்னர் உச்ச நீதிமன்றம் புதிய தேர்வுச் சட்ட செயல்முறையை ரத்து செய்தால், தலைமை தேர்தல் ஆணையர் தேர்வு என்னவாகும்? ஆகையால் நீங்க கொஞ்சம் காத்திருந்திருக்கலாம். எங்களுக்குத் தெரிந்தவரை, இந்த முன்மொழிவு பரிசீலிக்கப்படவில்லை. ராகுல் காந்தி கூட்டத்தில் பங்கேற்றது குறித்து, அவர் கூட்டத்தில் என்ன சொன்னார்? என்ன நடந்தது என்பதை எங்களால் சொல்ல முடியாது. ராகுல் காந்தி எங்கள் கட்சியின் தலைவர்.நாங்கள் கூறியது கட்சியின் நிலைப்பாடு” எனத் தெரிவித்தார்.